சனி, 5 ஜூன், 2021

கொவிட் தடுப்பூசியை செலுத்துவதில் கப்பல் பணியாளர்களுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை.- திரு மன்சுக் மாண்டவியா


 கப்பல் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர் வழி (தனிப் பொறுப்பு) , ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். கப்பல் பணியாளர்கள் அனைவருக்கும் அவர்கள் பணிக்கு செல்வதற்கு முன்பு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச கப்பல் பணியாளர்கள் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அவர்களது பணியைக் கருத்தில்கொண்டு, தடுப்பூசியை செலுத்துவதில் கப்பல் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. கொவிட் தடுப்பூசியை வழங்குவதில் கப்பல் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளினால் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், மும்பை, கொச்சின், கொல்கத்தா ஆகிய துறைமுகக் கழகங்களில் உள்ள மருத்துவமனைகளில் கப்பல் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்றும் இணைந்துள்ளது.

இது தவிர, கப்பல் பணியாளர்களை முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்குமாறு மாநில அரசுகளை இந்த அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு, கேரளா மற்றும் கோவா அரசுகள் ஏற்கனவே வழங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக