செவ்வாய், 22 ஜூன், 2021

ஒன்றிய அரசின் நவீன தாராளமயக்கொள்கை, ஏற்கனவே ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் தவறான அணுகுமுறை உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிகுந்த தேக்கத்தில் உள்ளது.- கே.பாலகிருஷ்ணன்



சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நல்ல தொடக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு 

திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று நடைபெறும் முதல் சட்டப்பேரவைக்கூட்டத்தில் மாநில ஆளுநர் ஆற்றிய உரை நல்ல தொடக்கம்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொடூரமான கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இச்சவாலை வெற்றிகரமாக இந்த அரசு சமாளித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தக்கூடிய மாநில சுயாட்சிக் கோட்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், கொரோனா 3வது அலை வருமேயானால் அவற்றை எதிர்கொள்ள சுகாதாரக்கட்டமைப்பை மேம்படுத்துவது, அரசு  நிர்வாகத்தில் ஊழலை ஒழித்திட லோக்ஆயுக்தாவை நடைமுறைப்படுத்துவது, மாநிலத்தில் உள்ள மத்திய பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டு அனைத்து ஒன்றிய அரசு துறை நிர்வாக அலுவலகங்களில் தமிழை இணை மொழியாக பயன்படுத்த வற்புறுத்துவது மற்றும் இவ்வலுவலகங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோருவது, வேளாண் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனத்தை முறைப்படுத்திட சட்டம் கொண்டு வருவதும், தேக்கமுற்றுள்ள தொழில்துறையை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்வதும், உழவர் சந்தைகளை புனரமைப்பது என்ற முடிவும் வரவேற்க வேண்டிய நல்ல அம்சங்களாகும்.

ஒன்றிய அரசின் நவீன தாராளமயக்கொள்கை, ஏற்கனவே ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் தவறான அணுகுமுறை உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிகுந்த தேக்கத்தில் உள்ளது. இத்தகைய பின்னணியில் நிதி நிலைமை உள்ளிட்டு ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென்று ஆளுநர் உரை  குறிப்பிட்டுள்ளது. ஒன்றிய அரசின் தவறான வரிக் கொள்கையால் பெட்ரோல் - டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த பொருட்களின் விலைகளும் உயர்ந்து சாதாரண மக்கள் தலையில் சுமை அதிகரித்துள்ளது. மோடி அரசு மாநிலங்களின் வரி வருவாயை கபளீகரம் செய்து மாநிலங்களை நிதிநெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.  ஒன்றிய அரசின் கூட்டாட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளை எதிர்த்து தமிழக அரசு ஒத்தக்கருத்துள்ள மாநிலங்களோடு சேர்ந்து வலுவாக குரெலழுப்பிட வேண்டும். 

நீட் தேர்வால் தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை நீக்கும் வகையில் சட்டம் கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனினும், நீட் தேர்வு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசிடம் உள்ளது என்பதையும் கவனப்படுத்துகிறோம். 

அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி கணிசமான அளவிற்கு தனியார் மயமாக்கப்பட்டுள்ள பின்னணியில், சுயநிதி கல்வி நிலையங்களில் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்காத அளவிற்கு கல்விக்கட்டணங்களை அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏற்கனவே, அஇஅதிமுக அரசால் நடத்தாமல் கைவிடப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மாநிலத்திற்கு அதிக அதிகாரங்களை வலியுறுத்தும் அதேநேரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சியாக செயல்பட கூடுதல் அதிகாரமும், நிதியும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக்கிட நடவடிக்கை மேற்கொள்வதை வரவேற்பதோடு, தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

இலங்கை தமிழர்களின் நலன் காத்திட ஒன்றிய அரசை வற்புறுத்தியுள்ளதும் இலங்கை அகதிகளுக்கு ஒன்றிய அரசு குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழக அரசு கோரியுள்ளதும் இம்மக்களுக்கு புதிய நம்பிக்கையளிக்கும் செய்தியாகும். 

தமிழக முதல்வர்  சில தினங்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்த போது,  நீட் தேர்வு,  புதிய கல்விக்கொள்கை, 3 வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற சட்டங்களையும் ஒன்றிய அரசின் கொள்கையையும் ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருப்பது இப்பிரச்சனைகளில் மாநில அரசு உறுதியாக இருக்குமென்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், மாநில மக்களின் தேவைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றிட வேண்டுமென்றும் பிரதமரிடம் வலியுறுத்திய பல அம்சங்களும் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. 

மொத்தத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் இன்றைய ஆளுநர் உரை வரவேற்கத்தக்க வகையில் உள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக