இந்திய ரயில்வேயின் முன்னுரிமைகளில் ஒன்றாக பாதுகாப்பு விளங்குகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பெருந்தொற்றின் போது வைரசுக்கு எதிரான இந்திய ரயில்வேயின் போரில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) பல்வேறு வகைகளில் பங்காற்றியது.
நிறுத்தப்பட்டுள்ள சரக்குகளை பாதுகாத்தல், தேவையானோருக்கு உணவு வழங்குதல், தொழிலாளர் சிறப்பு ரயில்களுக்கு பாதுகாப்பளித்தல், தொழிலாளர் சிறப்பு ரயில்களில் 45 குழந்தை பிறப்புகள் மற்றும் 34 மருத்துவ அவசர நிலைகளை கையாளுதல் என பல்வேறு வகைகளில் ஆர்பிஎஃப் உதவியது.
ஆர்பிஎஃப் காவலர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து ரயில் நிலையங்களில் உயிர்களை காப்பாற்றிய பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்பது ஜீவன் ரக்ஷா பதக்கங்கள் மற்றும் ஒரு வீர தீர பதக்கம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு குடியரசுத் தலைவரால் 2018 முதல் வழங்கப்பட்டுள்ளன.
ரயில்வே பாதுகாப்பு படையில் அதிகளவில் பெண்களை சேர்த்ததன் மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இந்திய ரயில்வேயின் நடவடிக்கைகளுக்கு வலுவூட்டப்பட்டது. 10568 காலியிடங்கள் 2019-ல் நிரப்பப்பட்டன. ஆர்பிஎஃப்-ல் இதற்கு முன் 3 சதவீதமாக இருந்த பெண் பணியாளர்களின் விகிதம் (2312), 9 சதவீதமாக (6242) அதிகரித்தது. அதிக பெண்கள் பணியாற்றும் மத்திய படையாக ஆர்பிஎஃப் விளங்குகிறது.
குழந்தைகளை மீட்பதில் ஆர்பிஎஃப் முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து நிலையான செயல்பாட்டு வழிமுறை இறுதி செய்யப்பட்டுள்ளது.
2000-ம் ஆண்டு நிலவரப்படி தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் குழந்தைகள் உதவி மையங்கள் 132 நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2017 முதல் 2021 மே வரை மொத்தம் 56318 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 2018 முதல் 2021 மே வரை மொத்தம் 976 குழந்தைகள் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக