புதன், 23 ஜூன், 2021

பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு கூடுதல் உணவு தானியங்களை அடுத்த 5 மாதங்களுக்கு மேலும் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு கூடுதல் உணவு தானியங்களை அடுத்த 5 மாதங்களுக்கு மேலும் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு  கூடுதல் உணவு தானியத்தை  அடுத்த 5 மாதங்களுக்கு மேலும் ஒதுக்கீடு செய்ய பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி  ஜூலை முதல் நவம்பர் 2021 வரை, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உள்ள 81.35 கோடி பயனாளிகளுக்கு (அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் உட்பட முன்னுரிமை பிரிவினர் )  மாதம் ஒன்றுக்கு குடும்பத்தில் உள்ள நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும்.

பொது  விநியோக திட்டத்தின் கீழ் 81.35 கோடி தனிநபர்களுக்கு கூடுதல் உணவு தானியமாக, மாதம் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ வழங்க அனுமதித்ததன் மூலம் ஏற்படும் உணவு மானியத்தின் மதிப்பு  ரூ.64,031 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முழு செலவையும், மாநில அரசுகள் / யூனியன் பிரதேச அரசுகளின் பங்களிப்பு இல்லாமல் மத்திய அரசே ஏற்கிறது.  இந்த உணவு தானியங்களின் போக்குவரத்து மற்றும் கையாளுதல், நியாயவிலை கடைகளின் டீலர் செலவு என மத்திய அரசுக்கு ரூ.3,234,.85 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.  மத்திய அரசுக்கு ஏற்படும் மொத்த செலவு ரூ. 67,266.44 கோடியாக இருக்கும்.

கூடுதலாக வழங்கப்படும் உணவு தானியங்கள்  அரிசியா அல்லது  கோதுமையா என்பதை உணவு மற்றும் பொது விநியோகத்துறை முடிவு செய்யும்.  பருவமழை, பனிப் பொழிவு, கொவிட் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை பொறுத்து, பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் 3 மற்றும் 4 வது கட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்படும் / விநியோகிப்படும் காலத்தை நீட்டிப்பது குறித்தும்  உணவு மற்றும் பொது விநியோகத்துறை முடிவு செய்யும்.  

கூடுதல் உணவு தானியத்தின் மொத்த அளவு 204 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும்.  உணவு தானியங்களின் கூடுதல் ஒதுக்கீடு, கொரோனா ஏற்படுத்திய பொருளாதார இடையூறு காரணமாக ஏழைகள் சந்திக்கும் கஷ்டங்களை போக்கும். அடுத்த 5 ஆண்டுகளில், இந்த இடையூறு காரணமாக உணவு தானியம் கிடைக்காமல், எந்த ஏழை குடும்பமும் கஷ்டப்படாது.

மத்திய ரயில்சைட் கிடங்கு நிறுவனம் (CRWC)  மற்றும் மத்திய கிடங்கு நிறுவனம் (CWC) இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

 ‘‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை’’ என பிரதமர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் நடவடிக்கையாக, எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்தவும், தனியார் துறை திறமைகளை, பொதுத்துறை நிறுவனங்களில் கொண்டு வரவும், சிஆர்டபிள்யூசி நிறுவனம் மற்றும் சிடபிள்யூ சி நிறுவனத்தின் இணைப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன் மூலம் இந்நிறுவனங்களின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் உரிமைகள்  ஒன்றாக இணைக்கப்படும்.  இந்த இணைப்பு, இரு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒரே நிர்வாகத்தின் கீழ்  இணையும்.  இதன் மூலம் இந்த நிறுவனங்களின் திறன்கள், பயன்பாடு, வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மேம்படும். நிதி சேமிப்பை உறுதி செய்யும்.  ரயில் பாதைகள் அருகே புதிய கிடங்குகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

இந்த இணைப்பு மூலம் ஆர்டபிள்யூசி நிறுவனத்தின் நிர்வாகச் செலவு ரூ.5 கோடி குறையும்,   பயன்பாட்டு திறன் அதிகரிக்கும்.  தற்போது சேமிக்கப்படும் சிமெண்ட், உரம், சர்க்கரை, உப்பு மற்றும் சோடா தவிர பிற பொருட்களையும் கிடங்குளில் சேமித்து வைக்க முடியும். 

ரயில்வே சரக்கு கிடங்குகள் அருகே குறைந்தது 50 கிடங்குகள் கூடுதலாக அமைக்கப்படும். இது அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும். இந்த இணைப்பு 8 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்(எஸ்விஜி)   இடையே  வரிவசூல் தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் :

கரீபியன் நாடான ‘செயின் வின்சென்ட் மற்றும் கிரெனெடைன்ஸ்(எஸ்விஜி)’  மற்றும் இந்தியா இடையே வரி வசூல் தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகள் இடையே இது போன்ற ஒப்பந்தம் இதுவரை இல்லாமல் இருந்தது.

இரு நாடுகள் இடையேயான இந்த புதிய ஒப்பந்தம் மூலம், இரு நாட்டின் பிரதிநிதிகளும், மற்ற நாடுகளுக்கு சென்று தனிநபர்களிடம் வரி தொடர்பான விசாரணை மற்றும் ஆய்வு  நடத்த முடியும். வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களில் இருந்து நிதி தொடர்பான தகவல்களை பெற முடியும். இதன் மூலம் இரு நாடுகளும், வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பண பதுக்கலை தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக