சனி, 19 ஜூன், 2021

தமிழக முதலமைச்சர் அவர்கள் கோவைக்கான எய்ம்ஸ் மருத்துவமனை கோரிக்கையை ஈரோடு பெருந்துறைக்கு பரிசீலிக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது.- E.R.ஈஸ்வரன்


 எய்ம்ஸ் மருத்துவமனை கோவைக்கு வேண்டுமென்று பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கேட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொங்குநாட்டு மக்களின் சார்பாக முதலமைச்சருக்கு நன்றி. - E.R.ஈஸ்வரன்

நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் அவர்கள் பாரத பிரதமர் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு தேவையான முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அந்த கோரிக்கைகளில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் பாரத பிரதமர் அவர்களிடம் வலியுறுத்தி உள்ளார். இது கொங்கு மண்டல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு கொங்கு மண்டலத்தை புறக்கணிக்கிறது என்று கூறியவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கடந்த அதிமுக ஆட்சியில்  பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுத்தோம். அதற்காக போராட்டத்தை முன்னெடுத்தோம். மத்திய அரசு பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆய்வு செய்து தயாராக இருந்தது. ஆனால் கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் உட்பட முன்னாள் அமைச்சர்கள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் கடந்த அதிமுக ஆட்சியில்  அதிகமாக இருந்தும் ஒருவர் கூட கொங்கு மண்டலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென்று குரல் கொடுக்கவில்லை. 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொங்கு மண்டலம் கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை வேண்டுமென்று கேட்டிருக்கிறார். இந்த கோரிக்கை யாரும் எதிர்பார்க்காத ஒன்று. எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைக்கப்பட்டால் கொங்கு மண்டல மாவட்டங்கள் அனைத்திற்கும் மையமாக இருக்கும். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. எனவே  தமிழக முதலமைச்சர் அவர்கள் கோவைக்கான எய்ம்ஸ் மருத்துவமனை கோரிக்கையை ஈரோடு பெருந்துறைக்கு பரிசீலிக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக