செவ்வாய், 22 ஜூன், 2021

உலக சந்தைக்கு தரம் வாய்ந்த புதிய வகை பொம்மைகளை உருவாக்குவதில் (Toycathon)டாய்கேத்தான் கவனம் செலுத்துகிறது. - திருமதி. ஸ்மிருதி இரானி


(Toycathon) டாய்கேத்தான் 2021 இறுதி போட்டியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்ஜே தோத்ரே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில் அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த டாய்கேத்தான் 2021 போட்டியை, கல்வித்துறை அமைச்சகம் ஐந்து இதர அமைச்சகங்களுடன் இணைந்து நடத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, உள்ளூர் மலிவு விலை பொருட்களை பயன்படுத்தி இந்திய மற்றும் உலக சந்தைக்கு தரம் வாய்ந்த புதிய வகை பொம்மைகளை உருவாக்குவதில் டாய்கேத்தான் கவனம் செலுத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி  இரானி பேசியதாவது:

நாட்டின் முதல் டாய்கேத்தான் போட்டி, உலகத்துக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.  இந்தப் போட்டியில் கலந்து கொண்ட 17,749 குழுக்களுக்கு பாராட்டுக்கள். இந்த இறுதி போட்டியில் இருந்து புதிய கருத்துக்கள், வர்த்தகமயமாக்கப்படவுள்ளன. குழந்தைகளின் உளவியல் திறன்கள், ஞாபக சக்தி ஆகியவற்றில்  பொம்மைகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் எதிர்காலத்தில் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்வதில் மிகப் பெரிய பொறுப்பை உருவாக்குகிறது. 

நமது குழந்தைகள் விளையாடும் 85 சதவீத பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுபவை மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரானவை. நீடித்த வளர்ச்சிக்கான பிரதமரின் உறுதிப்பாட்டில் இருந்து உற்சாகம் பெற்று, ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் நீடித்து உழைக்கக் கூடிய பொம்மைகளை தயாரிக்க வேண்டும். நமது பொறியியல் ஆற்றல் மூலம், தொழில்நுட்ப வல்லுனர்கள், புதுமையான தொழில்நுட்பங்களுடன் கூடிய எலக்ட்ரானிக் பொம்மைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

மத்திய அமைச்சர் திரு சஞ்ஜே தோத்ரே பேசுகையில், ‘‘ இந்திய பொம்மை சந்தையின் மதிப்பு ரூ.1.5 பில்லியன் அமெரிக்க டாலர். பெரும்பாலான பொம்மைகளை நாம் இறக்குமதி செய்கிறோம். உலக பொம்மை சந்தையின் மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் உள்ளது. நாம் நமது சொந்த படைப்பாற்றல் மூலம் புதுமையான பொம்மைகளை தயாரித்து  பொம்மை சந்தையில் இடம் பிடிக்க வேண்டும். இந்த டாய்கேத்தான் போட்டி, நமது இளைஞர்கள் புதுமையான பொம்மைகளை, உலகத்துக்காக இந்தியாவில் தயாரிக்க வழிவகுக்கும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக