திங்கள், 21 ஜூன், 2021

தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு உறுதியேற்றுள்ளது. - கி.வீரமணி

 சரியற்றவைகளை சரி செய்யும் சமத்துவக் கொள்கையுடைய அரசின் - ஆளுநர் உரை! பாராட்டு - வரவேற்பு - கி.வீரமணி

இன்று (21.6.2021)  கலைவாணர் அரங்கில் தொடங்கிய  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் சட்டமன்ற முதல் கூட்டத் தொடரில், ஆட்சிக் கொள்கைகள் அறிவிப்புப் பிரகடனம்போல், ‘ஆளுநர் உரை’ என்ற தலைப்பில், ஆளுநர் திரு.  பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆற்றிய உரை (தமிழ்நாடு அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட உரை என்பது அனைவரும் அறிந்த ஒன்று) வரலாற்றுச் சிறப்பு மிக்கது. தமிழ்நாட்டின் அத்துணைப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க உறுதி பூண்டு, ஆட்சியை மக்களாட்சியாக,  ஒரு கட்சி ஆட்சியாக இல்லாமல் - அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திடும் சமூகநீதிக் கொடி பறக்கும் ஆட்சியாக அமைவதோடு,

தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு உறுதியேற்றுள்ளது.

“திராவிட சித்தாந்தத்தின் ஒப்பற்ற தலைவர், நவீன தமிழ்ச் சமுதாயத்தைச் செதுக்கிய சிற்பி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்திருக்கின்ற பாதையில் பீடு நடை போட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தலைநிமிர்ந்து நோக்கும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம். இந்தியாவின் ஈடு இணையற்ற மாநிலம் இன்பத் தமிழ்நாடுதான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்“ - என்று அவ்வுரையில் முத்தாய்ப்பாகக் கூறியுள்ளது, சரியானவரால், சரியான பாதையில், சரியான நேரத்தில் சரியற்றவைகளை சரி செய்ய ஆயத்தமாகி, சரி சமத்துவக் கொள்கையுள்ள மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடரும் இந்தக் ‘கலைஞர் அரசினை’ வாழ்த்தும் கோடானு கோடி மக்களோடு நாமும் இணைகிறோம்; வாழ்த்தி மகிழ்கிறோம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக