வியாழன், 27 மே, 2021

அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1400 Imported Oxygen Cylinders மற்றும் Regulators 18 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அனுப்பி வைத்தார்



சிப்காட் நிறுவனம் மூலம் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் (Imported Oxygen Cylinders) மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை (Regulators) 18 மாவட்டங்களுக்கு கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தார்

கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை மாநிலத்தில் ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்புடைய சாதனங்களுக்கு (Oxygen and related equipments) மிகப்பெரும் பற்றாக்குறையைத் தோற்றுவித்துள்ளது. இவற்றின் அவசரத் தன்மை மற்றும் தவிர்க்கப்பட இயலாத தேவையைக் கருதி, இந்த நெருக்கடியான பெருந்தொற்றுப் பரவல் சூழ்நிலையை சமாளித்திட சுகாதாரத் துறைக்கும், உள்ளூர் அமைப்புகளுக்கும் உதவிட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) போதிய அளவிற்கான ஆக்சிஜன் சாதனங்களை (Oxygen equipments) கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்கவும், கோவிட் பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், சிப்காட் நிறுவனம், சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் துபாயிலிருந்து 1,915 ஆக்சிஜன் உருளைகள் (oxygen cylinders), 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகளையும் (Oxygen Regulators), 3,250 ஓட்ட அளவு உருளைகளையும் ( medical oxygen flow meters), 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் (Oxygen concentrators), 800 ஆக்சிஜன் நிரப்பட்ட உருளைகளையும் (filled cylinders), என மொத்தம் 40.71 கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்ய ஆணைகள் (Orders) அளித்துள்ளது. இதுவரை, 515 ஆக்சிஜன் உருளைகளும் (oxygen cylinders), 1,780 மருத்துவ ஆக்சிஜன் ஒழுங்குபடுத்தும் கருவிகளும் (Oxygen Regulators), 250 மருத்துவ ஆக்சிஜன் ஓட்ட அளவு கருவிகளும் (medical oxygen flow meters), இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள கருவிகளை கூடிய விரைவில் வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்ளூர் வழங்குநர்களிடமிருந்து (local suppliers) 4.33 கோடி ரூபாய் மதிப்பிலான, ஈரப்பதமூட்டியுடன் கூடிய ஓட்டக்கருவிகள் (flow meter with humidifiers), முறைப்படுத்தும் கருவிகள், செப்பு விசைக் குழாய்கள் (copper pipes), வெளியேற்றும் குழாய்கள் (outlets), பலவாயில் குழாய்கள் (manifolds) முதலியனவற்றை, சிப்காட் நிறுவனம் கண்டறிந்து கொள்முதல் செய்து பொதுப் பணித் துறை மருத்துவப் பணிகளுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில், இதுவரை உயிர்வலி இணைக்கப்படாத 1000 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.

மேலும், சிப்காட் நிறுவனம், தனது தொழில் பூங்காக்களின் அருகில் அமைந்திருக்கும் தொழிற்பிரிவுகளிலிருந்து, 2,000 காலி ஆக்சிஜன் உருளைகளைத் தருவித்து, அவற்றில் தேவைக்கேற்ப, ஆக்சிஜனை நிரப்பி, கும்மிடிப்பூண்டி மற்றும் தூத்துக்குடி திட்ட அலுவலகங்கள் வாயிலாக, சென்னை மாவட்டத்திற்கு 1010, சிவகங்கை மாவட்டத்திற்கு 130, விழுப்புரம் மாவட்டத்திற்கு 100, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 20, வேலூர் மாவட்டத்திற்கு 100, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 250, திருவள்ளூர் மாவட்டத்திற்கு 130, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 100, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 60, என மருத்துமனைகளுக்கு கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்பட்டுள்ளது. 
இதுவரை, இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஆணைகளில், 1,400 ஆக்சிஜன் உருளைகள் சிங்கப்பூரிலிருந்து, விசாகப்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள, 1400 ஆக்ஸிஜன் உருளைகள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை (Oxygen cylinders and regulators) கரூர் மாவட்டத்திற்கு 75, தருமபுரி மாவட்டத்திற்கு 75, நீலகிரி மாவட்டத்திற்கு 75, சிவகங்கை மாவட்டத்திற்கு 100, நாமக்கல் மாவட்டத்திற்கு 75, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 75, திருவாரூர் மாவட்டத்திற்கு 75, தேனி மாவட்டத்திற்கு 75, திண்டுக்கல் மாவட்டத்திற்கு 75, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 75, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 75, விருதுநகர் மாவட்டத்திற்கு 75, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 75, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 75, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 100, கடலூர் மாவட்டத்திற்கு 100, விழுப்புரம் மாவட்டத்திற்கு 75, இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 50, என மொத்தம் 1400 ஆக்சிஜன் உருளைகள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் நிகழ்வினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26-5-2021) தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு ஊரகத் தொழிற் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர். பாலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தொழில் துறை முதன்மைச் செயலாளர் திரு நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழில் துறை சிறப்பு செயலாளர் திரு. வி. அருண் ராய், இ.ஆ.ப., சிப்காட் மேலாண்மை இயக்குநர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக