வெள்ளி, 28 மே, 2021

என். ரங்கசாமி அவர்களை ‘பொம்மை முதல்வராக்கி’ பாஜக-வே புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆளுவது எனும் நிலையை உருவாக்கும் சூழ்ச்சி ? - கி.வீரமணி

 புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக நுழையும் பா.ஜ.க.வின் வித்தைகள்: என். ரங்கசாமி அவர்களை ‘பொம்மை முதல்வராக்கி’ பா.ஜ.க.வே ஆளுவது எனும் நிலையை உருவாக்கும் சூழ்ச்சி ? - கி.வீரமணி

‘எதிர்த்து ஒழிக்க முடியாத குடியை உறவாடிக் கெடு’ என்பது கிராமங்களில் புழங்கும் ஓர் அனுபவப் பழமொழி - அதனை இன்றைய அரசியலைப் பார்த்து விளங்கிக் கொள்ள வேண்டுமானால், புதுச்சேரியில் பா.ஜ.க. நடத்தும் அரசியல் ‘சித்து விளையாட்டையும்‘ ‘எத்துவாளித்தனத்தையும்‘ பார்த்தாலே புரிந்துவிடும்.

பா.ஜ.க. மறைமுக ஆட்சிக்கு முன்னோட்டமா?

நாம் சென்ற மாதமே, தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பவர் என்ற போதிலும் - அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சென்னையில் சிகிச்சை பெறும் நிலையில், அவசர அவசரமாக மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் (பா.ஜ.க.விற்கு முன்பு ஆதரவு தர - பழைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்த - “கவிழ்ப்புப் பெருமான்கள்” இரண்டு பேர் உட்பட மூன்று பேர்) நியமனத்தை செய்தனர். அதன்மூலம் 6 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட பா.ஜ.க.வின் பலத்தை 9 ஆக உயர்த்தியும், வெற்றி பெற்ற சுயேச்சைக்காரர்கள் 3 பேர்களிடம் பா.ஜ.க.வுக்கு ஆதரவுக் கடிதம் வாங்கவும் முயற்சித்தனர்.

அப்போதே புதுச்சேரியில் பா.ஜ.க. மறைமுகமாக தனது ஆட்சியை அமைக்க தேவையான முன்னோட்டத்தினை ஆயத்தப்படுத்தி வருகிறது என்றும், அது மக்கள் தேர்ந்தெடுத்த ஜனநாயக முறைக்கு எதிரானது; அடுத்து முதல் அமைச்சர் ரங்கசாமி அவர்களின் முதலமைச்சர் பதவிக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தி, ஆளும் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும் வழக்கமான பா.ஜ.க.வின் “அமித்ஷாயிசம்“ என்பதையும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு மக்களுக்கு தெளிவுபடுத்தினோம்.

30 பேர் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் 10  பேர் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - அறுவர் பா.ஜ.க. உறுப்பினர் என்றாலே பெரும்பான்மை, மேலும் என்.ஆர். காங்கிரசின் ரங்கசாமி அவர்களின் அரசை பலமாக்க வேண்டும் என்பது முன் வைக்கப்படும் ஒரு வாதமானால், அதற்கு என்றும் ஆபத்து இல்லை என்ற நிலையை உருவாக்க சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற்றாலே ஆபத்து தவிர்க்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்பது ஓரளவு புரிந்து கொள்ள முடியும் - நியாயப்படுத்த முடியாவிட்டாலும் கூட!

ஆனால் அவசர அவசரமாக மூன்று பேர் நியமனம் (பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்) எதற்காக?

அமைச்சரவையே அமையாத நிலையில்...

இன்னும் அமைச்சரவையே அமையாத நிலையில் இப்போது ஜனநாயகத்தின் முன் வாசல் வழியே (மக்கள் வாக்களித்து) வராமல் பின் வாசல் நியமனம் மூலம் மூவர் வந்து பதவியேற்க வைத்ததும் இப்போது, துணை முதல்வர் உட்பட பா.ஜ.க.வுக்கு மொத்தம் ஆறு அமைச்சர்களில் மூன்று அமைச்சர் பதவிகளை எப்படியாவது பெற்று, பா.ஜ.க.விடமே உண்மையான ஆட்சி அதிகாரம் இருக்கும் நிலையை உருவாக்கி, சுதந்திரமாக, செயல்பட முடியாத முதல் அமைச்சராக பெயரளவில் திரு. ரங்கசாமி அவர்களை ஆக்கி, பதுமையைப் போல் அமர்த்திடும் “அரசியல்” - இது ஏற்கெனவே பீகாரில் நிதிஷ்குமார் முதல்வராகவும்,   துணை முதல்வராக பா.ஜ.க.வே  உண்மையாக ஆட்சி புரிந்து வருவதைப் போன்று ஒரு நிலையை புதுச்சேரியிலும் நடத்திடவே இத்தகைய முன்னேற்பாடுகள்!

பா.ஜ.க. வித்தைகள்

பா.ஜ.க.விடம் “சரணாகதி” அடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஒரு நெருக்கடியை என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுத்தி, பா.ஜ.க.வின் காவிக் கொடியை புதுச்சேரியில் 30இல் 6 இடங்களை மட்டுமே பெற்ற கட்சியாக இருந்தும் “வித்தைகள்” மூலம் இப்படி ஒரு விபரீத அரசியலை அரங்கேற்றத் துடிக்கிறார்கள்!

முதல் அமைச்சர் ரங்கசாமி அவர்கள் “மவுன சாமியாகவே” இருந்து இந்த நிலைக்கு உடன்பட்டு, தேர்ந்தெடுத்த ஜனநாயகத்தை வெறும் ‘கேலிக் கூத்தாக்கப் போகிறாரா? அல்லது மக்களின் தீர்ப்பைப் பற்றிக் கவலைப்படாமல் வண்டி ஓடுகிற வரை ஓடட்டும் என்று அரசியல் நடத்தப் போகிறாரா?  அல்லது உண்மையான மக்களாட்சியை நடத்தப் போகிறாரா? என்பதே  அரசியல் நோக்கர்களின் ‘மில்லியன் டாலர்’ கேள்வியாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக