வியாழன், 27 மே, 2021

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு கட்ட உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது.- நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன்



மேகதாது அணை திட்டம் பற்றிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 21.5.2021 தேதியிட்ட ஆணை குறித்து மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் விளக்கம்

15.4.2021-ஆம் நாளிட்ட Times of India நாளேட்டில். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக ஆரம்பகட்டப் பணிகளான சாலை அமைத்தல், கட்டுமானப் பொருட்களை சேகரித்தல் போன்ற வேலைகள் நடைபெற்று வருவதாக செய்தி வெளியானது.

மேற்படி நாளேட்டுச் செய்தியின் அடிப்படையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, வனத் துறை மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலைமாற்றம் அமைச்சகத்தின் வனப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2006-ஆம் ஆண்டைய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை ஆகியவற்றின்படி உரிய அனுமதியினை பெற்றுள்ளதா என்பதை அறிவதற்காக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து அசல் விண்ணப்பம் (O.A.No.111 of 2021 (SZ)) வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம், தெற்கு மண்டலம், சென்னை, 15.04.2021 அன்று "Times of India" பத்திரிக்கையில், மேகதாது அணை பற்றி வெளியான செய்திகளை கருத்தில் கொண்டு, தன்னிச்சையாக (Suo moto)21.05.2021 அன்று இது குறித்த ஆய்வு செய்து தீர்ப்பாயத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் ஒருங்கிணைந்த மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திலிருந்து ஒருவர், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திலிருந்து ஒருவர், காவிரி நீர்வாரி நிகாம், கர்நாடகத்திலிருந்து ஒருவர் மற்றும் கர்நாடக அரசிலிருந்து கூடுதல் வனப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உள்ளனர். இந்த குழு மேகதாது அணை கட்டினால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அதன் அறிக்கையை 05.07.2021 க்கு முன்பாக அளிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. மேலும், இந்த குழுவிற்கு கர்நாடகத்தின் தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஆணையிட்டுள்ளது.

இந்த வழக்கில் 11 பிரதிவாதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், தமிழ்நாட்டிலிருந்து தலைமைச் செயலாளர், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளர் மற்றும் பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் சேர்க்கப்பட்டுள்ளனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஒரு பிரதிவாதியாகும். மேலும், இவ்வழக்கின் பிரதிவாதிகளின் பதில் மனுக்களை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டு வழக்கினை மறுவிசாரணைக்கு 05.07.2021 அன்றைய தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதற்கிடையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்ததை திரும்ப பெறவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை ஆணை வழங்கவும் கோரி தமிழ்நாடு அரசு 30.11.2018 அன்று மனு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சக்கத்தின், ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்டங்கள் குறித்த வல்லுனர் குழு 19.07.2019 அன்று நடைபெற்ற தனது 25-வது கூட்டத்தில் தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ளது.

இது தவிர, இயக்குநர், திட்ட மதிப்பீட்டு இயக்குநகரம், மத்திய நீர்வள குழுமம், கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றையும் 05.12.2018 அன்று உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்விரு மனுக்களும் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், இத்திட்டத்தை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

பரிசீலிக்க எடுத்துக்கொள்வதாக தெரியவந்ததையடுத்து, தமிழ்நாடு அரசு தெரிவித்த எதிர்ப்பின் பேரில், அடுத்தடுத்து நடைபெற்றஆணையத்தின் மூன்று கூட்டங்களில் மேகதாது அணைபற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த பிரச்சனை குறித்து, தமிழக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு கட்ட உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. இவ்வாறு மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக