வெள்ளி, 28 மே, 2021

உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கானப் பாதையை வகுத்துள்ளது. தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துகள்.- மு.க.ஸ்டாலின்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி

தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான 'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்களின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவதுபோல அவருக்கு கேரளாவின் மிகப் புகழ்பெற்ற விருதான ஓ.என்.வி. விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி.குறுப்பு அவர்களின் பெயரால் கேரளப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழு விருதாளரைத் தேர்வு செய்து இந்த விருதினை வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையை நம்முடைய கவிப்பேரரசு அவர்கள் பெற்று, அன்னைத் தமிழுக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைத் தனது தமிழ் ஆசான் என எல்லா நிலைகளிலும் உரக்கச் சொல்லி, கவிதை - திரைப்பாடல்- தனிப்பாடல் - புதினம் - சிறுகதை எனத் தமிழ் இலக்கியப் பரப்பின் அனைத்துத் துறைகளிலும் தனது தனித்துவமிக்க படைப்புகளால் முத்திரை பதித்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை 7 முறை பெற்றவர். இலக்கியப் படைப்புக்கான சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றவர். இந்திய ஒன்றிய அரசின் பத்மபூஷண் விருது பெற்றவர். கவிப்பேரரசு அவர்களின் படைப்பாற்றலுக்காகத் தற்போது கிடைத்திருக்கும் கேரளாவின் ஓ.என்.வி. விருதின் வாயிலாக அவரது தமிழாற்றல் தனது எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி, உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கானப் பாதையை வகுத்துள்ளது. தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக