செவ்வாய், 11 மே, 2021

தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், தேவையான செவிலியர் பணி இடங்களை நிரப்பி, கொரோனா பெருந் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.- வைகோ


மே 12 உலக செவிலியர் நாள். செவிலியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு, சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும்  தன்மையும் கொண்டு, மனித அசிங்கங்களை கூட பொருட்படுத்தாமல் பொறுமையுடன் ஆற்றும் அரும்பணி. 

இங்கிலாந்தின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில், 1820 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள் பிறந்தார்  புளோரன்ஸ் நைட்டிங்கேல். இறை அருளால் தனக்கு இடப்பட்ட ஆணையாக, செவிலியர் பணிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். செவிலியர் பணியில் வழிகாட்டு நெறிகளை உருவாக்கினார். தன்னைப் போன்று, அறத்தொண்டுகளில் ஆர்வம் கொண்ட இளம்பெண்களை ஒருங்கிணைத்து, செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.  

போர்க்களங்களில் வெட்டுக்காயங்கள் அடைந்து, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த வீரர்கள், இரவு நேரங்களில் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்துக் கொண்டு இருந்தார்கள். கையில் லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு, அவர்களைத் தேடி ஆறுதல் கூறி. தேவையான மருந்துகளை வழங்கினார். அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி அவர்தம் குடும்பத்தாருக்குத் தெரிவித்து, அவர்களின் கவலையைப் போக்கி விரைந்து நலம் பெறச் செய்தார். தங்களைக் காக்க, விண்ணுலகில் இருந்து தேவதை ஒன்று மண் உலகிற்கு கையில் விளக்குடன் வந்திருக்கின்றார். லேடி வித் லேம்ப் என்று அகமகிழ்ந்து பாராட்டினர்.

எனவே, புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12-ஆம் நாள், லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் உள்ள விளக்குக்கு ஒளி ஏற்றி அந்நாளில் அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கை மாற்றப்பட்டு, அந்த மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகின்றது. இது அவருக்கு நன்றி கூறும் நாள். ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவையும் அனுபவத்தையும் மனிதநேயத்தையும் தோள் மாற்றம் செய்வதன் அடையாளம் ஆகும். 

நோயாளிகளைக் காப்பாற்ற  ஒரு பக்கம் மருந்து  இருந்தால் மட்டும் பயன் இல்லை. அந்த நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளின் தன்மை அறிந்து, இடம் அறிந்து, காலம்அறிந்து அவர்களைத் தேற்றும் கடமை ஆற்றுவதற்கு, எல்லை அற்ற பொறுமை வேண்டும். தாய் உள்ளம் வேண்டும். அத்தகைய தாய்க்கு ஈடானவர்கள் செவிலியர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் களப்பணி ஆற்றி வருகின்றார்கள்.

மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொறுப்பு ஏற்கும் முன்பே, 1212  செவிலியர்களை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கி, அரசு ஆணை வெளியிட்டு, அவர்களின் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி இருக்கின்றார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், முன் களப்பணியாளர்களாகப் பணி ஆற்றிய நூற்றுக்கும் மேற்பட்டசெவிலியர்கள், தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து இருக்கின்றார்கள். இரண்டு நாட்களுக்கு முன்புகூட  எட்டு மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனாவுக்குப் பலியாகி இருக்கின்றார். இத்தகைய தியாகிகளுக்கு, தமிழக அரசு, புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும். அதுபோலவே, முன்களப் பணியாளர்களாக பணியாற்றி வரும் மருத்துவத்துறை காவல் துறை வருவாய் துறை உள்ளிட்ட ஏனைய துறைகயினரையும் அடையாளம் கண்டு, அவர்களின் அவர்களின் சீருடையை அலங்கரிக்கும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்திட வேண்டும்.

WHO உலக சுகாதார நிறுவனம் மற்றும் INC இந்திய நர்சிங் கவுன்சில் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், தேவையான செவிலியர் பணி இடங்களை நிரப்பி, கொரோனா பெருந் தொற்றில் இருந்து  மக்களைப் பாதுகாக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.  சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் மருத்துவமும், கல்வியும் அரசுப் பொறுப்பில் வழங்க வேண்டும். பொற்கால முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அதை நிறைவேற்றிக்கொண்டு வருகின்றார். 

புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு இருக்கின்ற அணைவருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  என் நெஞ்சம் நிறைந்த செவிலியர் நாள் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக