திங்கள், 5 ஜூலை, 2021

மகாராஷ்டிராவை சேர்ந்த 7 கோடி பேர், கோவாவைச் சேர்ந்த 5.32 லட்சம் பேர் பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இலவச உணவு தானியங்களை பெற்றுள்ளனர்.

 


கொவிட் இரண்டாம் அலையின் போது, கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 7 கோடி பேர், கோவாவைச் சேர்ந்த 5.32 லட்சம் பேர் பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இலவச உணவு தானியங்களை பெற்றுள்ளனர்.

இது குறித்து மும்பையில் பேட்டியளித்த, இந்திய உணவு கழகத்தின் பொது மேலாளர் திருமிகு கே.பி.ஆஷா கூறுகையில், 3.68 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 2.57 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஆகியவை கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டன என்றார். இத்திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவுக்கு கடந்த 2 மாதத்தில் 7 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய உணவு கழகத்தின் மேற்கு மண்டல நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.பி.சிங் கூறுகையில், ‘‘இத்திட்டத்தை மத்திய அரசு அடுத்த 5 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதற்கு தேவையான உணவு தானியங்கள் இந்திய உணவு கழகத்திடம் உள்ளது’’ என்றார்.

கொவிட்-19 தொற்று காரணமாக ஏழைகள் சந்திக்கும் பொருளாதார இடையூறுகளை குறைக்க, பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டத்தை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 23ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு பயனளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக