நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்களுடன் 30.06.2021 அன்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அக்கோரிக்கைகளை ஆய்வு செய்த மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் ஒப்பந்ததாரர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கவனத்துடன் பரிசீலிக்க உயர் அலுவலர்கள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்கள். இச் சிறப்புக் குழுவின் கூட்டம் இன்று (03.07.2021) மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் அவர்கள் கூட்டத்தை துவக்கிவைத்து உரையாற்று கையில் ஒப்பந்ததாரர்களின் 22 கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் அதற்கான சாத்திய கூறுகளை ஆய்ந்து விரைவில் அறிக்கை தயாரிக்குமாறும் அறிவுரை வழங்கினார்கள். பாலம் கட்டும் பணிகளுக்கு ஆற்று மணலுக்கு பதிலாக எம் சான்ட்டையே பயன்படுத்தலாம் என்றும், எம் சான்ட்டின் தரத்தினை பொறுத்த வரையில் கண்காணிப்பு பொறியாளரும் மற்றும் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளரும் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.
ஒப்பந்ததாரர்கள் பதிவை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கும் முறையை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசிக்கபட்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் பணிகள் துவங்கப்பபடுவதற்கு முன்னதாக மின் கம்பங்கள் மாற்றுதல், குடிநீர் குழாய்கள் அமைத்தல் போன்றவற்றை சம்மந்தப்பட்ட துறைகள் மூலமாக முன்னதாக விரைந்து செயல்படுத்த கேட்டுக்கொள்வது என்றும், சென்னையில் சாலை பணிகளை இரவு நேரத்தில் மட்டுமே செய்ய முடியும் என்பதால் காவல் துறையின் முறையான அனுமதியை பெற உள்துறை செயலாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் மூலம் கடிதம் எழுதலாம் என்றும், பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் வாடகை உயர்வு மற்றும் பணிகளின் மதிப்பிட்டை இன்றைய விலை நிலவரப்படி உயர்த்த வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளும் பரிசீலக்கப்பட்டது. இது போன்ற ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த பிறகுதான் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட வேண்டும் என்ற அரசு ஆணையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று குழு கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. தீரஜ்குமார். இ.ஆ.ப, முதன்மை இயக்குநர் நெடுஞ்சாலைத்துறை திரு. ஆர். கோதண்டராமன். தலைமைப் பொறியாளர்கள் திருமதி. ந. சாந்தி, திரு, சந்திரசேகரன், திரு. பாலமுருகன். கண்காணிப்பு பொறியாளர்கள் திரு. பழனிவேல், திருமதி. கீதா, கோட்ட பொறியாளர்கள் திரு. இளங்கோ, திரு. சரவணசெல்வன், திரு. ரவி. ஆகியோர் பங்கு பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக