புதன், 19 மே, 2021

டவ்-தே புயல் காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயம் அடைந்தோருக்கு ரூ.50,000 கருணைத்தொகை வழங்கப்படும்.- பிரதமர் திரு நரேந்திர மோடி

 

டவ்-தே புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குஜராத் சென்றார்.  குஜராத் மற்றும் டையூ பகுதியில் புயல் பாதித்த  இன்உனா(கிர்-சோம்நாத்), ஜப்ராபாத்(அம்ரேலி), மகுவா(பாவ்நகர்) ஆகிய இடங்களை பிரதமர் பார்வையிட்டார்.

அதன்பின், குஜராத் மற்றும் டையுவில் மேற்கொள்ளப்படும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார்.

உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள, குஜராத் மாநிலத்துக்கு ரூ.1000 கோடி நிதி உதவியை பிரதமர் அறிவித்தார். குஜராத்தில் பாதிப்புகளை மதிப்பிட அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு அனுப்பி, அதன் அறிக்கை அடிப்படையில் மேலும் உதவிகள் அளிக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். 

இந்த சிக்கலான நேரத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் உள்கட்டமைப்பை சீரமைக்க மாநில அரசுடன், மத்திய அரசு இணைந்து செயல்படும் என பிரதமர் உறுதியளித்தார்.

பிரதமர் தனது பயணத்தின்போது, கொவிட் தொற்று நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தார். மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை குஜராத் நிர்வாகம் பிரதமரிடம் தெரிவித்தது. தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமரின் குஜராத் பயணத்தின்போது, முதல்வர் திரு விஜய் ரூபானி மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

நாட்டின் பல பகுதிகளில், புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், பிரதமர் தனது முழு ஒற்றுமையை வெளிப்படுத்தினார் மற்றும் இந்த பாதிப்பின் போது, உயிரழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அவர் தெரிவித்தார்.

கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் டாம்ன் மற்றும் டையு, தத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களில் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.

புயல் பாதிப்புக்குப்பின், பாதிக்கப்பட்ட மாநில அரசுகளுடன், மத்திய அரசு ஒன்றிணைந்து செயல்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பாதிப்பு மதிப்பீடுகளை மத்திய அரசுடன், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டபின், உடனடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.  

பேரிடர் மேலாண்மை தொடர்பான, அறிவியல் ஆய்வுகளை நாம் அதிகம் மேற்கொள்வதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக மக்களை அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய, மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும், நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தவும் அவர் அழைப்பு விடுத்தார்.  பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும், பழுதடைந்த வீடுகளை சரிசெய்வதில், உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக