ஞாயிறு, 13 ஜூன், 2021

டாஸ்மாக் கடைகள் திறக்காத மாவட்டத்திலிருந்து திறந்த மாவட்டங்களுக்கு மதுபிரியர்கள் படையெடுப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் வேண்டும்.- E.R ஈஸ்வரன்


 டாஸ்மாக் கடைகள் திறக்காத மாவட்டத்திலிருந்து திறந்த மாவட்டங்களுக்கு மதுபிரியர்கள் படையெடுப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் வேண்டும்.

கொரோனா பரவல் அதிகரித்து கொண்டிருந்த நேரத்தில்  பதவியேற்று தமிழக  முதலமைச்சர் அவர்களின் சாமர்த்தியமான செயல்பாடுகளாலும், துரிதமான நடவடிக்கைகளாலும் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இன்னும் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சில கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படாமலும், மீதமுள்ள 27 மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள்  திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள மற்ற மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.  இதனால் கொரோனா தொற்று குறைந்திருக்கும் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பினால் தொற்று  எண்ணிக்கை  அதிகரிக்கும் சூழல் உருவாகலாம். அதேபோல டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து திறக்கப்படாத மாவட்டங்களில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். 

 தமிழக அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எங்கு சென்றாலும் உணர முடிகிறது. டாஸ்மாக் கடைகள் திறப்பு விஷயத்தில் உள்ள பிரச்சினைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்னும் சில வாரங்களில் கொரோனா  தொற்று நீங்கிய தமிழ்நாடு என்ற தமிழக அரசின் இலக்கை அடைய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக