திங்கள், 7 ஜூன், 2021

தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும் எதுவும் செலவழிக்க வேண்டாம். நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கும்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


  ‘‘தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும்  எதுவும் செலவழிக்க வேண்டாம்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கும்’’ என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று மாலை ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

  • 100 வருடங்களில் மிகவும் மோசமான பெருந்தொற்று இதுவாகும். ஆனால் இந்த நெருக்கடி காலத்தில் நமது நாடு ஒற்றுமையுடன் நின்றது.
  • மருத்துவமனைகளையும், புதிய சுகாதார உள்கட்டமைப்பையும் அதிகளவில் நாம் நிறுவியுள்ளோம்.
  • முழு உடல் கவச உடைகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகட்டும், திரவ மருத்துவப் பிராணவாயுவின் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டதாகட்டும். அனைத்தையும் நாம் மேற்கொண்டோம்.
  • மக்களுக்கு உதவ நமது பாதுகாப்பு படைகளை நாம் பயன்படுத்தினோம். அத்தியாவசிய மருந்து பொருட்களின் உற்பத்தி மிகக் குறைந்த காலத்தில் அதிகப்படுத்தப்பட்டது.
  • தடுப்பூசி மட்டும் தான் கொவிட் தொற்றுக்கு எதிரான ஒரே கேடயம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் உயிர்களைப் பாதுகாத்து வருகின்றன.
  • கொவிட் தொற்றுக்கு எதிரானத் தடுப்பூசியை இந்தியா உருவாக்கி இருக்காவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். கடந்த 50-60 ஆண்டுகால வரலாற்றை நோக்கினால், வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இந்தியா பெறுவதற்கு ஒரு தசாப்தம் தேவைப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். தடுப்பூசியைத் தயாரிக்கும் பணி வெளிநாடுகளில் நிறைவடைவது வழக்கம்.
  • நமது தடுப்பூசித் திட்டத்தின் வேகத்தை அதிகரித்துள்ளோம். ஓராண்டு காலத்திற்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.
  • கொவிட் தடுப்பூசிகளின் சாத்தியக் கூறுகளை  விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவந்த போதே நமது தடுப்பூசியின் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த நாம் தொடங்கிவிட்டோம்.
  • நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு காரணமாக, ஓராண்டுக்குள், இந்தியா ஒன்றல்ல, இரண்டு கொவிட் தடுப்பூசிகளை உருவாக்கியது.  23 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
  • கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகளை நாம் நம்புகிறோம். மாபெரும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் போக்குவரத்து முக்கிய பங்காற்றியுள்ளது. தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இன்று 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மூன்று சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
  • நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசிகள் குறித்தும் நாம் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
  • குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானதா என்பதை அறிவதற்கான சோதனைகளை நாம் தொடங்கி இருக்கிறோம். வைரசுக்கு எதிரான நாட்டின் போரில் இது பெருமளவு உதவும்.
  • நமது மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் இரண்டாம் அலையில் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள். இரண்டாவது அலை உருவாவதற்கு முன்பே பெரும்பாலான மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.
  • தொற்றுக்கு எதிராக நமது முன்கள ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படவில்லையெனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?
  • ஜூன் 21-ல் இருந்து 18  மற்றும் அதற்கு மேல் உள்ள வயதினருக்கான இலவச தடுப்பு மருந்துகளை மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்கும்.
  • 25% சதவீத தடுப்பு மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்ளலாம். மாநில அரசுகள் வசம் இருந்த 25% தடுப்பூசி சம்பந்தமான பொறுப்புகள், இனி மத்திய அரசால் கவனிக்கப்படும் என்பதை பல்வேறு ஆலோசனைகளுக்குப்  பிறகு முடிவு செய்துள்ளோம்.
  • தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும்  எதுவும் செலவழிக்க வேண்டாம்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கும். நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பு மருந்தை வழங்கினாலும்,  கட்டணத்தை செலுத்த விரும்புவோர் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
  • பிரதமரின் ஏழைகள் நலன் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி வரை நாங்கள் நீட்டித்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி இந்தியர்கள் இலவச ரேஷன் பெறுவர்.
  • கொவிட் தடுப்பூசிகள் தொடர்பாக விழிப்புணர்வை பரப்பும்படி  மக்களை நான் வலியுறுத்துகிறேன். நாம் நமது பாதுகாப்பை கைவிட முடியாது. பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை. நமது மொத்த சக்தியையும் பயன்படுத்தி கொவிட்டுக்கு  எதிராக நாம் போராட வேண்டும். வைரசை நாம் கட்டாயம் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
  • தடுப்பூசிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, ஒரு டோசுக்கு ரூ. 150ஐ அதிகபட்ச சேவை கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் விதிக்க முடியும். அதனை கண்காணிக்கும் பணி மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக