செவ்வாய், 12 அக்டோபர், 2021

140 கோடி மக்களை நிர்வகிக்கும் அரசால், 130 விமானங்களை நிர்வகிக்க முடியாதா? விற்கப்பட்டது Air India விமானம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் தன்மானமும் தான்!.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

 140 கோடி மக்களை நிர்வகிக்கும் அரசால், 130 விமானங்களை நிர்வகிக்க முடியாதா?

விற்கப்பட்டது Air India விமானம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் தன்மானமும் தான்!

1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள Air India நிறுவனத்தை, 15 ஆயிரம் கோடிக்கு விற்றது சரிதானா? !

130 விமானங்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வழித்தடங்களில் நன்கு அனுபவமும் பயிற்சியும் பெற்ற ஆயிரக்கணக்கான விமான ஓட்டிகள் மற்றும் பணிப்பெண்கள், 30,000-க்கும் மேற்பட்ட இதரப் பணியாளர்கள், 4400 உள்நாட்டு விமானத் தளங்களில் இறங்கி - ஏறும் அனுமதி, 1800 விமான நிலையங்களில் விமானங்களை நிறுத்த அனுமதி, 900 சர்வதேச விமானத் தளங்களைப் பயன்படுத்தும் வசதி, ஒரே நேரத்தில் 10 விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் வசதியுடைய பரந்துபட்ட ஓடுதளங்களைக் கொண்ட, உலக பிரசித்தி பெற்ற இலண்டன் Heathrow விமான நிலையத்தில் நமது விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான பிரத்யேக வசதி போன்ற எண்ணிலடங்கா சிறப்பம்சங்களைக் கொண்ட, இந்திய மகாராஜாக்களே வரவேற்கிறார்கள் என்பதைப் போன்று பொருளுடைய இலச்சினையைக் (Logo) கொண்ட, இந்திய வான்வெளிப் போக்குவரத்தின் அடையாளமாகத் திகழும் Air India நிறுவனம் தனியாருக்கு கைமாறிப் போனது,  Air India விமான நிறுவனத்தை விற்பதைப் போன்ற உணர்வாக அல்ல, இந்தியாவையே ஏலத்திற்கு விட்டதைப் போன்ற ஒரு சொல்லமுடியாத ஆதங்கமும் மனக்கவலையும் ஒவ்வொரு இந்தியரின் ஆழ்மனதில் எழாமல் இல்லை. ஒரு விமானத்தின் விலை சராசரியாக ரூ.400 கோடி என்று எடுத்துக் கொண்டால், 130 விமானங்களின் விலை ரூ.52,000 கோடி ஆகும். Air India மற்றும் Indian Airlines நிறுவனங்களுக்கு, கூட்டாக இந்தியா முழுவதும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பீடு பல்லாயிரம் கோடிகைளைத் தாண்டும் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது.

ஆயிரக்கணக்கான விமான ஓட்டிகளை எந்த நாடாலும் எந்தவொரு நிறுவனத்தாலும் ஓரிரு மாதங்களிலோ அல்லது ஆண்டுகளிலோ ஆயத்தப்படுத்த முடியாது. அதுவும் Air India விமானிகள் தனித்தகுதி படைத்தவர்கள்; அதேபோன்றுதான் பணிப்பெண்கள் மற்றும் பிறப் பணியாளர்களும். பொதுத்தளத்தில் ஒரு பொருள் அல்லது ஒரு நிறுவனம் அது எந்த அளவிற்கு வாடிக்கையாளர்களிடம் பிரபல்யம் ஆகியிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே அதன் மதிப்பு கணக்கிடப்படும்.

விமானம் என்றாலே குறித்த நேரத்தில் புறப்படும் என்ற நிலை மாறி, காலம் தாழ்த்தியே புறப்படும், காலம் தாழ்த்தியே வரும் என்ற ஓர் அவப்பெயரை Air India ஏற்படுத்தியிருந்தாலும் கூட, இந்த நிமிடம் வரையிலும் எத்தனையோ தனியார் விமான நிறுவனங்கள் வந்தாலும், Air India விமானத்திலேயே பெரும்பாலானோர் விரும்பிப் பயணம் செய்வதை நாம் கண்கூடக் கண்டிருக்கிறோம். என்ன தான் Air India நிறுவனத்தின் மீது குறை இருந்தாலும் கூட, பெரும்பாலான இந்தியப் பயணிகளும் இந்திய மக்களும் Air India என்ற ஒரு வார்த்தைக்காக அதை நேசித்தார்கள்; அதனாலேயே விரும்பி பயணித்தார்கள்; நாமும் அப்படியே!

இந்திய அடையாளத்தைத் தாங்கி நின்ற இந்திய அரசின் ஒரே ஒரு விமான நிறுவனமும் இப்பொழுது விற்கப்பட்டுவிட்டது. 2007 வரையிலும் Air India-வின் வெளிநாட்டு சேவை பெரிய இலாபம் ஈட்டி வந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. ஆனால், உள்நாட்டு சேவையில் ஈடுபட்ட Indian Airlines இலாபம் ஈட்டவில்லை. நன்கு இலாபம் ஈட்டி வந்த Air India-வை மீண்டும் கூடுதல் இலாபம் ஈட்டவும், அதை விரிவுப்படுத்துவற்கும் பதிலாக, இலாபம் ஈட்டாமல் செயல்பட்டு வந்த Indian Airlines-ன் உள்நாட்டு விமான சேவையை அத்துடன் இணைக்கும் முயற்சியை 2007-ல் மேற்கொண்டார்கள். அன்று தொடங்கிய தலைவலி தீரவேயில்லை. இறுதியாக இரண்டு சேவைகளும் ஏலத்தில் முடிந்தன.

ஒரு மிகப்பெரிய அரசாங்கத்தின் பின்புலத்தில் இயங்கி, பல பத்தாண்டுகள் இந்தியாவில் விமானப் பயணம் என்றாலே Air India / Indian Airlines-யை தவிர வேறெதுவுமில்லை என்று ஏகபோகமாக இருந்த காலத்தில், அமைந்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி அதை நிலைநிறுத்திக் கொள்ளாமல், மேல்மட்டத்தில் இருந்தவர்கள் திட்டமிட்டே அதைப் பலவீனப்படுத்தி, நட்டத்தில் தள்ளி, இன்று அதை விற்பனை செய்யும் அளவிற்கு சூழலை உருவாக்கி, அனைத்துப் பழிகளையும் அடிமட்டப் பணியாளர்கள் மீதே போட்டுவிட்டு அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தப்பிக்க நினைக்கிறார்கள். அதற்காக Air India நிறுவனம் நட்டத்தில் இயங்குவதில் அதன் ஊழியர்களுக்குப் பொறுப்பில்லை என்றுக் கூற முடியாது. நமது நாட்டில் தனியார் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்திற்கு விசுவாசமாக வேலை செய்வதும், அதிக வசதி - அதிக சம்பளம் தரும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையே செய்வதில்லை என்ற மனப்போக்கும் மிகமிக முக்கியக் காரணமாகும். இது ஓரிரு ஆண்டுகளில் நிகழ்ந்த பிரச்சினை அல்ல. பல பத்தாண்டுகளாக அந்தத் துறைக்குத் தலைமை வகித்தவர்களே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஏறக்குறைய 70,000 கோடிக்கு மேல் Air India நிறுவனத்திற்கு கடன் ஏற்பட்டுவிட்டது என்றுக் கூறுகின்ற அதே நேரத்தில், கரோனா காலகட்டத்தைத் தவிர, பிற எல்லா காலகட்டத்திலும், நல்ல முறையில் இயங்கி வந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் நட்டத்தில் இயங்க நேர்ந்தது ஏன் என்பது குறித்து, கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஆட்சியிலும் ஏன் முறையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை? அதைக் களைவதற்குண்டான நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? என்ற கேள்வி, அரசினுடைய சொத்துக்களை இதுபோன்று அடிமாட்டு விலைக்கு விற்கும் அரசின் முடிவை ஏற்றுக் கொள்ளாத இலட்சோபலட்சம் இந்தியக் குடிமக்களுடைய கேள்வியாகவே உள்ளது. வேண்டுமென்றால் அவர்களால் இப்பொழுது தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் கட்சி என்ற கட்டுப்பாட்டில் சிக்குண்டிருக்கக்கக் கூடியவர்களைத் தவிர, நாடு - இது ஒட்டுமொத்த இந்திய மக்களின் சொத்து என்று பார்க்கக் கூடிய எந்தவொருக் குடிமகனாலும் இதை சகித்துக் கொள்ள முடியாது.

ஏலத்திற்கு விட்டதுதான் விட்டார்கள்; அதை ஒரு நியாயமான விலைக்காவது விட்டிருக்க வேண்டாமா? மதிப்பிட முடியாத Branding (வணிகக் குறியீடு) கொண்ட ஏர் இந்தியா நிறுவனத்தை வெறும் ரூ.15,000 கோடிக்குத் தாரை வார்த்திருப்பதை எப்படித் தான் ஏற்றுக் கொள்ள முடியும்?  ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு சுமார் 450 பில்லியன்கள் இருக்கக் கூடும் என்று ஒரு தகவல் கூறுகிறது. அதாவது ஒரு பில்லியன் என்றால் 100 கோடி என்று அர்த்தம். மொத்த மதிப்பீடு ரூ.45,000 கோடி என்று ஒரு தகவல் கூறுகிறது. எனவே ஒட்டுமொத்தத்தில் Air India மற்றும் Indian Airlines நிறுவனத்தின் மொத்த சொத்தின் மதிப்பீடு 1.5 இலட்சம் கோடிக்கு மேல் வரும். இதன் உண்மைத் தன்மை குறித்தும், வெறும் விமானங்கள் மட்டும் தான் டாடா நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டிருக்கின்றனவா அல்லது மேற்குறிப்பிட்ட அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் சேர்த்து விற்கப்பட்டுள்ளனவா என்பதை மத்திய அரசு இந்திய மக்களுக்கு கண்டிப்பாக தெளிவுபடுத்த வேண்டும். கண்முன்னே நான்கைந்து விமானங்களை வாடகைக்கு ஓட்டும் நிறுவனங்கள் நான்கைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விமானங்களை வாங்கி இயக்க முடிகிறதென்றால், ஓர் அரசு நிறுவனத்தால் ஏன் அதேபோன்று இயக்க இயலாது?

140 கோடி மக்களை ஆட்சி செய்யக்கூடிய ஓர் அரசால் 130 விமானங்களை இயக்க இயலாது என்று கூறுவது ஏற்புடையது அல்ல; பல்வேறு தளங்களில் கொள்ளை நடைபெற்றிருக்கிறது; வேறெங்கோ அடிப்படையில் குறைபாடு இருக்கிறது. விற்கப்பட்டது Air India நிறுவனம் அல்ல; விமானம் என்றாலே என்னவென்று கூடத் தெரியாத, அதில் பயணம் செய்யாத கோடான கோடி இந்தியர்களின் வியர்வையும், இரத்தமும், அவர்களின் உழைப்பும் அதில் அடங்கியிருக்கிறது. Air India விமான நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்றதை இந்திய மக்கள் தங்களுடைய ஆன்மாவை விற்றதைப் போன்ற அவமான உணர்வுடன் பார்க்கிறார்கள். நட்டத்தில் இயங்குகிறது என்பது உண்மை தான். நட்டம் ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டறியாமல், அந்த நிறுவனத்தையே தாரைவார்ப்பது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிடும் அல்லவா?

இதையே முன்னுதாரணமாகக் கொண்டு, நாளை ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்தையும் இதேபோன்று விற்க ஆரம்பித்தால் நாட்டின் கதி என்னவாகும்? Air India நிறுவனத்தை விற்று முழுக்கடனும் அடைபட்டிருந்தால் கூட ஒரு சந்தோஷமாவது ஏற்பட்டிருக்கும். ஆனால், வெறும் 15,000 கோடிக்கு ஒரு தேசத்தின் அடையாளத்தையே விற்பது எந்த விதத்தில் நியாயம்? இன்னும் 46,000 கோடி கடன் நிலுவையில் உள்ளதே! மீண்டும் இது போன்ற ஓர் அரசு நிறுவனத்தைக் கட்டியமைப்பது என்பது சாதாரண காரியமல்ல. இந்திய மக்கள் எத்தனையோ நட்டத்தைத் தாங்கி இருக்கிறார்கள். ஆனால், இதுபோன்று இந்திய அடையாளத்தை விற்பதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக