வியாழன், 14 அக்டோபர், 2021

ஒருங்கிணைந்து செயல்படுவது வேலையில் மட்டும் அல்ல வேலை செய்யும் இடங்களுக்கும் தேவை.- மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்


 ஒருங்கிணைந்து செயல்படுவது வேலையில் மட்டும் அல்லாமல், வேலை செய்யும் இடங்களுக்கும் தேவை என மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

டெக்னாலஜி பவன் வளாகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை(DST)  மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி(DSIR)  துறைக்கு நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கட்டிடத்தை, நவராத்திரி விழாவின் போது, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமரின் தொலைநோக்கான மத்திய விஸ்தா திட்டத்தை குறிப்பிட்ட மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பிறகும், நாட்டுக்கு மத்திய தலைமை செயலகம் இல்லை. பல துறை அமைச்சகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இதற்கு வாடகையாக பல கோடி ரூபாய் செலவாகிறது. மத்திய விஸ்தா திட்டம் பணத்தை மட்டும் சேமிக்காமல், நிர்வாகம் மற்றும் அதன் முடிவுகளில் நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் என்றார்.

இதேபோல், பிரதமர் மோடி நேற்று தொடங்கிய விரைவு சக்தி திட்டம், மத்திய அரசு துறைகளில் 16 உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இருந்த கட்டிடங்கள் எல்லாம், பொதுச் சட்டம்-480 திட்டத்தின் கீழ், அமெரிக்க உதவி நிறுவனத்தால் உணவு தானியங்களை சேமிப்பதற்காக கட்டப்பட்ட கிடங்குகள் போன்றவை  என டாக்டர் ஜித்தேந்திர சிங் நினைவு கூர்ந்தார். தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட வளாகம், பற்றாக்குறை நிலையிலிருந்து, தற்சார்பு நிலைக்கு நாடு செல்வதன் அடையாளமாக உள்ளது என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். உணவு தானிய உற்பத்தியில் மட்டும், இந்தியா தற்சார்பு நிலையை அடையாமல், ஏற்றுமதி நாடுகளிலும் இந்தியா முன்னணியில் உள்ளதாக டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

கடந்த 1960 மற்றும் 70ம் ஆண்டுகளிலேயே நம்மிடம்  பிரபல விஞ்ஞானிகள் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு உலக தரத்திலான வசதிகள் இல்லை. தற்போது அவை உருவாக்கப்பட்டுள்ளன என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

புதிய வளாகத்தில் கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்படும்போது, அதில் ஆடிட்டோரியம், கேன்டீன், வரவேற்பரை, தபால் அலுவலகம், வங்கி உட்பட அனைத்து வசதிகளும் இருக்கும் என டாக்டர் ஜித்தேந்திர சிங் குறிப்பிட்டார். இந்த வளாகம் முழுவதும் நவீன வசதிகள்,   சூரிய மின்சக்தி விளக்குகள் போன்றவற்றுடன் உருவாக்கப்படும் என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக