வியாழன், 7 அக்டோபர், 2021

வள்ளலார் பிறந்த நாள் - ‘‘தனிப்பெருங் கருணை நாள்!’’ ‘‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்‘’ - உலகத் தமிழர்களின் வரவேற்பு.- கி.வீரமணி

 வள்ளலார்  பிறந்த நாள் - ‘‘தனிப்பெருங் கருணை நாள்!’’

‘‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்‘’ - உலகத் தமிழர்களின் வரவேற்பு

தி.மு.க. பொற்கால ஆட்சியில் புதுமை ‘‘மவுனப் புரட்சிகள்’’ நாளும் - நாளும்!

இதோ ‘‘திராவிடம் வென்றதன்’’ பலன்! பொற்கால ஆட்சி - விடியல் ஆட்சி

தமிழ்நாட்டில் 150 நாள்களைக் கடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் ஒரு விடியல் ஆட்சி - விரைந்து செயல்படும் விவேகமான ஆட்சியாக நடைபெற்று வருகிறது; நாளும் நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்களால் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் - அனைவரையும் மகிழ வைக்கும் அரசின் பிரகடனங்களாகவே திகழ்ந்து, பொற்கால ஆட்சிதான் இப்போது தமிழ்நாட்டில் என்ற விடியல் ஆட்சி என்பதை உலகுக்குப் பறைசாற்றுகிறது! 

நடக்க முடியாதவை என்று கருதப்பட்டவை இன்று எளிதில் நடக்கின்றன!

வள்ளலார் பிறந்த நாள்- ‘தனிப்பெருங் கருணை நாளாக’ அறிவிப்பு

நேற்றும், முன்னாளும் அவர் அறிவித்த இரண்டு இனிப்பான அறிவிப்புகள் தமிழ்நாட்டு மக்களால் மட்டுமல்ல; உலகமெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்களையும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்கும் அறிவிப்புகளாகவே அமைந்துள்ளன!!

‘மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் - கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போக!’ 

என்று கசையடி தந்து பாடிய சமரச சன்மார்க்க நெறிகண்ட வடலூர் வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் 5 ஆம் நாளை ‘தனிப் பெருங் கருணை நாளாக’ தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கது!

புரட்டுச் சாமியார்களும், பொய் வேடம் பூண்டு விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, பன்னாட்டு சுரண்டலை, ஹிந்துத்துவத்தின் ‘மாரீச வேடமணிந்து’ தங்கு தடையின்றி நடத்தும் ‘நடிப்புத் திலக ஆஷாடபூதிகளும்‘ உலவும் நிலையில், காவி அணியாமல், தூய வெள்ளை உடை உடுத்தி, கருணை பொழிந்த மானிட விடுதலை நேயரான வள்ளலாரின் பிறந்த நாளை வெகு பொருத்தமாக கருணை நாள் (Compassion Day) என்ற அறிவிப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம்.

தமிழ்நாடு அரசின் (தி.மு.க. அரசின்) வழிகாட்டும் நெறி என முன்பு - அவர்களே உறுதி கூறியபடி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘; ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதே!

‘‘நால்வருணம், தோல் வருணம், சாத்திரக் குப்பைகளான ஜாதியும், மதமும், சமயமும் தவிர்த்த’’ வள்ளலார் என்ற நிலைப்பாடுதான் மானிடத்தில் விடியலை ஏற்படுத்தி உண்மையான ஒருமைப்பாட்டை மக்களிடையே உருவாக்கும்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 419 ஆவது வாக்குறுதி இந்த அறிவிப்பின்மூலம் செயல்வடிவம் பெற்று ஒளி வீசுகிறது.

வள்ளலாரின் ஆறாம் திருமுறை பாடல்களை அச்சிட்டுப் பரப்பியவர் தந்தை பெரியார்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே தனது ‘குடிஅரசு’ப் பதிப்பகத்தில் வள்ளலாரின் சிறப்பான (ஆறாம் திருமுறை) பாடல்களை அச்சடித்து, ‘ராமலிங்கர்பாடல்’ என்ற தலைப்பில் லட்சக்கணக்கில் மக்கள் மத்தியில் பரப்பியவர் ஆவார்!

‘வயிற்றுப் பசி, அறிவுப் பசி, சமத்துவப் பசி போக்கும் நெறி’ தந்தவர் ஆதி சுயமரியாதைச் சுடரான வள்ளலார்!

‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்‘ - உலகத் தமிழர்களின் காதுகளில் தேனிசை!

அதுபோலவே உலகெங்கும் பரவி விரவியுள்ள, எம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் விழிப்புணர்வைக் காக்கும் வண்ணம் - ‘புலம் பெயர் தமிழர் நல வாரியம்‘ என்பதை சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 ஆம் நாள் அந்த நாளாகக் கொண்டாடப்படும் என்பது தேனிசையாக உலகத் தமிழர்களின் காதுகளில் கேட்டு, எல்லையற்ற மகிழ்ச்சியை - தமிழ்நாட்டின் ஈத்துவக்கும் இன்பமாக எண்ணி, எண்ணிப் பெருமிதம் கொள்ளுகிறோம்.

முதலமைச்சரை, தமிழ்நாடு அரசை - வாயார, நாவார, மனமார வாழ்த்துகின்றோம்.

விடியல் ஆட்சியில் வேகமாக செயலுரு!

பற்பல நாடுகளில் நாம் சுற்றுப்பயணம் செய்தபோதெல்லாம் புலம் பெயர்ந்தோரின் வேண்டுகோளாக எது இருந்ததோ, அது இன்று இந்த விடியல் ஆட்சியில் வேகமாக செயலுரு கொண்டுள்ளது! மகிழ்ச்சியுடன் உலகத் தமிழர்கள் வரவேற்றுப் பாராட்டுகின்றனர்!!

அடுக்கடுக்கான மக்கள் நலத் திட்டங்கள் - அதிலும்கூட உலகளாவியப் பார்வை

இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!

இவ்வாட்சி வெறும் காட்சி அல்ல; மீட்சி என்பதை அகிலம் கண்டு அதிசயத்தில் மூக்கில் விரல் வைக்கிறது!

தொடரும் பொற்கால ஆட்சியில், புதுமை மவுனப் புரட்சிகள் நாளும் பூத்துக் குலுங்கி, புதிய வசந்தத்தைப் படைக்கின்றன!

திராவிடம் வென்றதின் பலன் கைமேல்

உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள்வரை திராவிடம் வென்றதின் பலனை கைமேல் அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர்.

திராவிடம் வென்றது; ஆரியம் தோற்றது

‘‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது’’ - திராவிடப் பண்பு!

‘கடல் தாண்டாதே - தீட்டு’ என்பது ஆரிய ஹிந்துத்துவ சாஸ்திரம்.

அவர்களே அதை மீறித்தான் சென்று சம்பாதிக்கின்றனர். அங்கேயே திராவிடம் வென்றது; ஆரியம் தோற்றது.

‘வென்ற திராவிடம்‘ புலம்பெயர் தமிழர் நல வாரியம்மூலம் புது வலிமையும், பெருமையும் பெறுவது திண்ணம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக