கடும்மழை பாதிப்பை - கடும் உழைப்பால் இரண்டே நாளில் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் சாதனை!ஸ்மார்ட் சிட்டிக்கான ரூ.6 ஆயிரம் கோடி எங்கே ஒளிந்தது?
டிரிபியூனல் அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டும்
வருங்காலத்தில் ஊழல்வாதிகளுக்குப் பாடமாக அமையட்டும்!.- கி.வீரமணி
சென்னை மற்றும் வட மாவட்டங்களிலும் சென்ற ஆறு ஆண்டுகாலத்தில் பெய்யாத அளவு கனமழை தொடர் மழையாகப் பொழிந்தது; அது வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது; தண்ணீர் ஆங்காங்கு பல பகுதிகளில் குறிப்பாக புறநகர் பகுதிகளில் தேங்கி மக்களை படகுகள்மூலம் வெளியேற்றிக் கொண்டு வரும் நிலைக்குத் தள்ளியது.
என்றாலும், அதுபற்றிச் சிறிதும் கலங்காமல் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 5, 6 நாள்களாக ஓய்வு ஒழிச்சலின்றி பம்பரம்போல் சுற்றிச் சுற்றி அமைச்சர்களுடன் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை அளித்ததோடு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி, நம்பிக்கையூட்டி, துயர் துடைப்புப் பணிகளில் தனது அரசு இயந்திரத்தையும் போர்க்கால அடிப்படையில், ராக்கெட் வேகத்தில் இயங்கும்படி முடுக்கிவிட்டு, இரண்டே நாள்களில் இயல்பு நிலைக்கு அவர்கள் வாழ்க்கை வருவதற்கான அத்துணைப் பணிகளையும் அயர்வின்றிச் செய்ததைக் கண்டு அவனியே மூக்கில் விரலை வைத்து வியந்து பாராட்டுகிறது!