மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் கொண்டாடப்பட்ட விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ‘ஐகானிக் வாரம்’ நேற்று நிறைவடைந்தது. இந்த கொண்டாட்டங்கள், கடந்த 23ம் தேதி தொடங்கியது. இதில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் அனைத்து ஊடகப் பிரிவுகளும் உற்சாகமாக பங்கேற்றன.
ஐகானிக் வாரத்தில், தூர்தர்ஷன் நெட்வொர்க், நேதாஜி, சமஸ்தானங்கள் இணைப்பு போன்ற ஆவணப் படங்களை காட்டின. புகழ்பெற்ற இந்திய திரைப்படம், ‘‘ராசி’-யும் ஒளிபரப்பட்டது. தேசிய திரைப்பட ஆவண காப்பகம், தனது ஓடிடி தளமான www.cinemasofindia.com -ல் திரைப்பட விழாவை நடத்தியது. ‘‘ஐலேண்ட் சிட்டி, ‘கிராஸிங் பிரிட்ஜஸ்’’ போன்ற படங்களின் தொகுப்பு சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டன.
பிராந்திய தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் செய்தி பிரிவுகள், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய சிறப்பு கதைகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை, தினசரி செய்தியில் ஒரு பகுதியாக சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒலிபரப்பின. பல சமுதாய ரேடியோ நிலையங்கள், சிறப்பு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின. இந்த நிகழ்ச்சிகளில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்கள், அதிகம் அறியப்படாத நாயகர்களின் விதிவிலக்கான பங்களிப்பு, வீரம், அர்ப்பணிப்பு, தியாகம் உள்ளிட்ட பல அம்சங்கள் எடுத்து கூறப்பட்டன.
நாடு முழுவதும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகங்கள், நாடகங்கள், மேஜிக் நிகழ்ச்சிகள், பொம்மலாட்டம், நாட்டுப்புறக் கலைகள் போன்றவற்றை நடத்தின. பல மாநிலங்களில், சுதந்திர நடைப் பயணம் ஆகியவை நேரு யுவ கேந்திர மற்றும் என்எஸ்எஸ் அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டன.
பெங்களூரு மக்கள் தொடர்பு அலுவலகம் நடத்திய சுதந்திர போராட்ட வீரர்களின் கண்காட்சியை மத்திய தகவல் மற்றும் ஒலிரப்புத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். இதே போன்ற கண்காட்சி ராஜஸ்தான் மக்கள் தொடர்பு அலுவலகத்தால், பிகானிரில் நடத்தப்பட்டது. இதை மத்திய இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெஹ்வல் தொடங்கி வைத்தார்.
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் பிராந்திய பிரிவுகள், நாடு முழுவதும் பல தலைப்புகளில் இணைய கருத்தரங்குகளை நடத்தின. இதில் சுதந்திர போராட்டத்தின் போது, மாநிலங்களைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் பங்களிப்பு பற்றிய தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, 90 வயதான சுதந்திர போராட்ட வீராங்கனை ரோஹினி கவாங்கர், மும்பை பத்திரிகை தகவல் அலுவலகம் நடத்திய ‘சுதந்திர இயக்கத்தில் மும்பையின் பங்கு என்ற இணைய கருத்தரங்கில் உரையாற்றினார்.
புவேனேஸ்வர் பத்திரிகை தகவல் அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் இளம் வயதினர் பலர் வினாடி வினா, கலந்துரையாடல் மற்றும் போட்டிகளில் பங்கேற்றனர்.
ஐகானிக் வாரம், மக்கள் பங்களிப்புடன் கூடிய நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. இதன் நோக்கம், அம்ரித் மகோத்ஸவத்தை அரசு தலைமையிலான நிகழ்ச்சியாக அல்லாமல், மக்கள் இயக்க நிகழ்ச்சியாக நடத்துவதுதான்.
ஐகானிக் வாரத்தில் முக்கிய அம்சமாக, ‘அரசியல் சாசனத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் மின்னணு- புகைப்பட கண்காட்சி, ‘சித்ராஞ்சலி@75’ என்ற தலைப்பில் மெய்நிகர் போஸ்டர் கண்காட்சி ஆகியவற்றை மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் மத்திய அமைச்சர்கள் ஜி. கிஷன் ரெட்டி, திரு அர்ஜூன் ராம் மெஹ்வல், டாக்டர். எல். முருகன் மற்றும் திருமதி மீனாட்சி லெகி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக