திங்கள், 16 ஆகஸ்ட், 2021

மனித சமூகம் சந்தித்து வரும் சவால்களை எதிர் கொள்வதற்காக முற்றிலும் வேறுபட்ட தீர்வுகளை உருவாக்குமாறு விஞ்ஞானிகளை குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்


 பருவநிலை மாற்றம் முதல் வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மருந்துகள் வரை மனித சமூகம் சந்தித்து வரும் சவால்களை எதிர் கொள்வதற்காக முற்றிலும் வேறுபட்ட தீர்வுகளை உருவாக்குமாறு விஞ்ஞானிகளை குடியரசு  துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான மையத்தில் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களிடையே இன்று உரையாற்றிய அவர், சிறப்பாக செயல்படுவதற்கும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க, விஞ்ஞானிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “மக்களின் வாழ்வை மகிழ்ச்சிகரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும், வசதியானதாகவும் மாற்றுவதே அறிவியலின் நோக்கம்’, என்று அவர் கூறினார்

அறிவியல் ஆராய்ச்சிகள், சமூகத்திற்குத் தொடர்பானதாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்திய அவர், இதனைக் கருத்தில் கொண்டு மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார். 300 காப்புரிமைகளைப் பெற்றதற்காகவும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஒரு சில புதிய நிறுவனங்களின் உருவாக்கத்திற்கு ஆதரவளித்து வருவதற்காகவும் ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான மையத்தை அவர் பாராட்டினார்.

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் அறிவியல் முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் குறிப்பிட்டு, இளம் வயது முதலே அறிவியல் சார்ந்த உணர்வை ஊட்டுவதற்கும், சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்துவதற்கும் அவசியம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.

மாணவர்கள் தங்களது இலக்குகளை அடைவதில் இருந்து ஒரு போதும் பின் வாங்கக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார். “கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை என்பதை தயவுகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் எல்லைகளைத் தாண்டி முயற்சி செய்ய வேண்டும், தற்போதைய நிலையில் ஒருபோதும் திருப்தி அடையக்கூடாது”, என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக