ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும் எஃகு அமைச்சகத்தின் ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் தூதருமான பி வி சிந்துவுக்கு விசாகப்பட்டினத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் திரு டி கே மொஹந்தி, நாட்டுக்கும் விசாகப்பட்டினம் எஃகு நிறுவனத்திற்கும் சிந்துவின் வெற்றி ஊக்கம் அளிப்பதாக கூறினார். விளையாட்டில் பி வி சிந்து செய்துள்ள சாதனைகளையும், ஆர்ஐஎன்எல் விசாகப்பட்டினம் எஃகு நிறுவனத்திற்கு அதன் தூதராக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அவர் ஆற்றியுள்ள பங்கையும் திரு மொஹந்தி குறிப்பிட்டார்.
விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும் விளையாட்டு உள்கட்டமைப்பை பேணுவதிலும் அந்நிறுவனம் முனைப்பாக உள்ளதாக அவர் மேலும் கூறினார். அனைத்து விளையாட்டு வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு பணியாளர்களையும் அவர்களது குழந்தைகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிறுவனம் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சிந்து நன்றி தெரிவித்தார். விளையாட்டை ஊக்குவிக்க அந்நிறுவனம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு சிந்து பாராட்டு தெரிவித்தார்.
பள்ளி குழந்தைகளிடையே ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டை ஊக்குவிக்குமாறு ஒலிம்பிக் வீரர்களிடம் சமீபத்தில் உரையாடிய பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க, உக்கு நகரத்தைச் சேர்ந்த விசாகா விமலா வித்யாலயா பள்ளியின் குழந்தைகளுடன் சிந்து உரையாடினார். அருணோதயா சிறப்பு பள்ளியை பார்வையிட்ட அவர், அங்குள்ள சிறப்பு குழந்தைகளோடு உரையாடியதோடு, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பேட்மிண்டன் கூடத்தையும் திறந்து வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக