புதன், 25 ஆகஸ்ட், 2021

பேரிடர், பருவநிலை மற்றும் மருத்துவ நெகிழ்தன்மை மீதான அமைச்சக குழு மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் பங்கேற்பு


 ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மண்டல தொடர் கலந்துரையாடல் 2021: பேரிடர், பருவநிலை மற்றும் மருத்துவ நெகிழ்தன்மை மீதான அமைச்சக குழு மாநாட்டில் மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டார்.‌

ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், மாலத்தீவுகள், பப்புவா நியூ கினியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் அமைச்சர்களும் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு நித்தியானந்த் ராய், உலக நாடுகளுடன் ஒத்துழைப்பை வழங்கி பணியாற்ற வேண்டும் என்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளார் என்று தெரிவித்தார். கொவிட்-19 பெருந்தொற்றின் மத்தியில் புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் நமது துயரத்தை, குறிப்பாக ஏழைகள் மற்றும் அதிக பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பிரிவினர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

ஆசிய பசிபிக் பகுதியில் எதிர்கால நெகிழ்தன்மையைக் கட்டமைப்பதற்கு உதவிகரமாக, இந்தியாவின் அனுபவங்கள் மற்றும் இந்தியா கற்றுக்கொண்ட விஷயங்களை அமைச்சர் மாநாட்டின்போது பகிர்ந்துகொண்டார்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் பேரிடர் மேலாண்மைத் துறையில் இந்தியா திருப்திகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். பரிட்சயமான பேரிடர்களால் ஏற்படும் இழப்பை குறைப்பதற்கு மேலும் அதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதேவேளையில், அதிகம் ஏற்படாத அல்லது எதிர்பாராத பேரிடர் அபாயங்களை எதிர்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கட்டுப்படுத்த முடியாத பேரிடரின் ஆற்றலையும், அதனால் ஏற்படும் தாக்கங்கள் எவ்வளவு விரைவாக அதிகரிக்கும் என்பதையும் கொவிட்-19 நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது. இயற்கை பேரிடர்கள் குறித்துப் பேசிய அமைச்சர், பருவநிலை மாறிவருவதால் இயற்கை மற்றும் மனித உயிர்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்று  எச்சரித்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை நடவடிக்கைகளுக்கான உச்சி மாநாட்டில், பேரிடர் நெகிழ்தன்மை கட்டமைப்பிற்கான சர்வதேச கூட்டணி பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பை திரு நித்யானந்த் ராய் நினைவு கூர்ந்தார்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக