செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

குடிநீர் தேவைகளுக்கு உதவுவதோடு பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு’ லட்சிய திட்டத்திற்கு வலுவூட்டும்.- ஜிதேந்திர சிங்


 வறண்ட இடங்களில் நிலத்தடி நீராதாரங்கள் குறித்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்) ஆய்வு செய்து வருவதாகவும், இது குடிநீர் தேவைகளுக்கு உதவுவதோடு பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு’ லட்சிய திட்டத்திற்கு வலுவூட்டும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

வட மேற்கு இந்தியாவில் உள்ள வறண்ட இடங்களில் நிலத்தடி நீர் ஆதாரங்களை மேம்படுத்த தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனமான என்ஜிஆர்ஐ உடன் இணைந்து சிஎஸ்ஐஆர் பணியாற்றி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்காக அதி நவீன முப்பரிமாண படமாக்கல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, 500 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வடமேற்கு இந்தியாவின் வறண்ட பகுதிகள் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பரந்து விரிந்து இருப்பதாகவும், நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் 12 சதவீதம் உள்ள இந்த பகுதிகளில் 8 கோடிக்கும் மேற்பட்டோர் வசிப்பதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

குறைந்த விலையில், மிகவும் துல்லியமான இந்த தொழில்நுட்பம் அதிகப் பகுதிகளில் குறைவான நேரத்தில் பணியை முடிக்கும் என்று அவர் கூறினார். 1.5 லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவில் ரூ 141 கோடி மதிப்பீட்டில் 2025-க்குள் இப்பணி நிறைவடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக