புதன், 6 அக்டோபர், 2021

2020-21 நிதியாண்டுக்கான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸை ரயில்வே ஊழியர்களுக்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல்


 2020-21 நிதியாண்டுக்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸை தகுதியுடைய அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் (ஆர்பிஎஃப்/ஆர்பிஎஸ்எஃப் பணியாளர்களைத் தவிர) வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்குவதற்கான செலவு ரூ 1984.73 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசிதழில் இல்லாத தகுதியுடைய பணியாளர்களுக்கு போனஸை கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு ரூ 7000 ஆகும். ஒரு ரயில்வே பணியாளருக்கு 78 நாட்களுக்கு அதிகபட்சமாக ரூ 17,951 வழங்கப்படும்.

இந்த முடிவால் சுமார் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி வாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தசரா/ பூஜை விடுமுறைக்கு முன் போனஸ் வழங்கப்படுகிறது. அமைச்சரவையின் முடிவு இந்த ஆண்டும் விடுமுறைக்கு முன்னதாக செயல்படுத்தப்படும்.

2010-11 முதல் 2019-20 வரையிலான நிதியாண்டுகளில் 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டிலும் 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தி சார்ந்த போனஸ் தொகை வழங்கப்படும், ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு பணியாளர்களை இது ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வேயின் உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ், நாடு முழுவதும் பரவியுள்ள அரசிதழ் சாராத அனைத்து ரயில்வே ஊழியர்களையும் (ஆர்பிஎஃப்/ஆர்பிஎஸ்எஃப் பணியாளர்கள் தவிர) சென்றடைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக