"இலங்கைத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை: அதிமுக அரசின் பொய்யுரை மட்டுமல்ல - பச்சை துரோகம்" - திரு. தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,
‘தி இந்து” ஆங்கில நாளிதழில் (25.02.2020) அன்று இரட்டைக் குடியுரிமை குறித்துத் தீட்டப்பட்டுள்ள தலையங்கம், இந்தியக் குடியுரிமை சட்டத்தின் கீழும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் எவருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றது. இந்தியக் குடியுரிமைச் சட்டத்தைக் கடந்த 2003ம் ஆண்டு திருத்தியபோது கூட, இந்திய வம்சாவளியினராக வெளிநா.ட்டில் வகிக்கும் இந்தியர்களுக்கு குறிப்பிட்ட சில உரிமைகளை மட்டும் இந்தியாவில் வழங்க வகை செய்யப்பட்டுள்ளதையும், தாங்கள் இந்தியாவில் வாக்களிக்கும் உரிமையையோ அல்லது நிலம் போன்ற சொத்துக்களை வாங்குவதற்கோ அனுமதி இல்லை எனவும் அத் தலையங்கம் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அன்றைய முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இலங்கைத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும் எனப் பரப்புரை செய்ததையும், அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் மேதகு ஆளுநர்; அவர்கள் ஆற்றிய உரையில் இலங்கைத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததையும் ‘தி இந்து” நாளேடு குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 08.01.2020 அன்று உரை நிகழ்த்தியக் கழகத் தலைவர் தளபதி அவர்கள், இலங்கைத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கிட சட்டத்தில் இடமே இல்லாத போது ஆளுநர் உரையின் வாயிலாக அரசு அது குறித்துத் தெரிவித்திருப்பது சாத்தியமற்ற ஒன்று என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்கள். அப்போது குறுக்கீட்டுப் பேசிய தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பாண்பாட்டுத்துறை அமைச்சர் திரு.பாண்டியராஜன் அவர்கள் இரட்டைக் குடியுரிமை வழங்க வகை செய்யப்படும் என அம்மையார் தெரிவித்ததும், ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதும் முற்றிலும் சாத்தியமே என கூசாமல் உண்மைக்கு மாறான தகவலை உரத்துக் கூறினார்.
ஆயினும், தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அவர்கள் மாநிலங்கள் அவையிலேயே, இரட்டைக் குடியுரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியோ அல்லது தற்போதைய குடியுரிமை சட்டத்தின் (CAA) அடிப்படையிலோ அனுமதிக்க இயலாத ஒன்று எனத் தெளிவாக அறிவித்திருந்தார்.
எனவே, சட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட முடியாத இரட்டைக் குடியுரிமையை சட்டப்பேரவையிலேயே அதை நிறைவேற்றுவது சாத்தியமே என உண்மைக்குப் புறம்பாக வாதிட்டு அவையைத் தவறாக வழி நடத்தியதுடன், நீண்டபல வருடங்களாக இந்தியக் குடியுரிமை பெறுவது ஒன்றே தாங்கள் அனுபவித்து வரும் அனைத்துத் துயரங்களுக்கும் சரியானதொரு நிரந்தரத் தீர்வாக இருந்திட முடியும் என தீர்க்கமாக நம்பிக்கையுடன் தமிழகத்தில் உள்ள முகாம்களிலும், வெளியிலும் வசிக்கும் ஏறத்தாழ 95,000 இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பேசிய திரு.பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உரிமை மீறல் பிரச்சனை ஒன்று கடந்த 18.02.2020 தேதியன்று எழுப்பப்பட்டது. இது குறித்து விவாதத்திற்குப் பின்னர் அமைச்சர் மீது உரிமை மீறல் பிரச்சனை ஏதுமில்லை எனப் பேரவைத் தலைவர் அவர்கள் தெரிவித்த நிலையில் அதனைக் கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மறுநாள் (19.02.2020) அன்று சட்டமன்றம் கூடியபோது, உரிமை மீறல் பிரச்சனை விவாதத்தின் போது முந்தையநாள் தான் கூறிய கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்காததுடன், மீண்டும் இரட்டைக் குடியுரிமை சாத்தியமே என வலியுறுத்தி அதுவே அதிமுக அரசின் நிலைப்பாடு என நியாயம் கற்பிக்க முயன்ற தமிழ் ஆட்சிமொழி அமைச்சர் அவர்களின் உள்நோக்கம் மிக்க பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவர்மீது மீண்டும் உரிமைப் பிரச்சனை ஒன்றினை எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் எழுப்பினார்;. ஆனால், பேரவைத் தலைவர் அனுமதி மறுத்த நிலையில் அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்து செய்தியாளர்களைச் சந்தித்து பேரவைத் தலைவரின் பாரபட்சமான நடவடிக்கைகளை விளக்கினோம்.
கழகத்தை பொறுத்தமட்டில், ‘சட்டவிரோதக் குடியேறிகள்” என்னும் பிரிவின் கீழ் இலங்கைத் தமிழர்களைக் கொண்டு வருதை முற்றிலும் நீக்கி அவர்கள் இந்தியக் குடியுரிமை பெற்ற மக்களாக இந்தியாவிலேயே தொடர்ந்து வகிக்கவும், உரிய உரிமைகளைப் பெறவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசம், மாநில அரசும், உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே உணர்வுபூர்வமானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும். பேரவையில் உள்நோக்கத்துடன் பொய்யுரைத்த அமைச்சரின் மீது உரிய நடவடிக்கையும் அவசியமானதாகும்.
இரட்டைக் குடியுரிமை என்ற சட்டப்படி சாத்தியமற்ற ஒன்றை நிலைநிறுத்த முயற்சிக்கும் அ.தி.மு.க அரசின் நிலைப்பாடென்பது உண்மையிலே இரட்டைக் வேடம் என்பதோடு, தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் அநீதி மட்டுமல்ல, கடைந்தெடுத்த பச்சைத் துரோகமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக