செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

வேளாண் விளைபொருட்களுக்குத் தரப்படுகின்ற ஆதரவு விலை மற்றும் ஊக்கத் தொகை என்ன? - வைகோ கேள்வி


வேளாண் விளைபொருட்களுக்குத் தரப்படுகின்ற
ஆதரவு விலை மற்றும் ஊக்கத் தொகை என்ன?
வைகோ கேள்விகளுக்கு அமைச்சர் விளக்கம்

கீழ்காணும் கேள்விகளுக்கு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

(அ) அரிசி, கோதுமை, பருப்பு விவசாயத்திற்கு, அரசு ஏதேனும் ஊக்கத்தொகை அறிவித்து இருக்கின்றதா?


(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களையும், கடந்த 4 ஆண்டுகளில் அளித்த ஊக்கத்தொகை விவரங்களையும் தருக.

(இ) ஊக்கத்தொகை குறித்துத் தீர்மானிக்கின்றபோது, விளைவிப்பதற்கான செலவுடன் 50 விழுக்காடு கூடுதலாகச் சேர்த்துத் தர வேண்டும் என சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதா?

(ஈ) அவ்வாறு இருப்பின், மேற்கண்ட ஊக்கத் தொகை அறிவிப்புகளில், அந்தப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதா?

வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்துள்ள விளக்கம்

அ, ஆ  ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:

22 விளைபொருட்களுக்கு அரசு குறைந்த அளவு ஆதரவு விலை அறிவித்து இருக்கின்றது.

மாநில அரசுகள், நடுவண் அமைச்சகங்கள், அரசுத்துறைகள் அளித்து இருக்கின்ற பரிந்துரைகளின் அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து, விவசாயச் செலவுகள் மற்றும் விளைபொருட்களின் சந்தை மதிப்பு ஆணையம், அளித்துள்ள பரிந்துரைகளின்படி, கரும்புக்கு உரிய விலை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

குறைந்த அளவு ஆதரவு விலை பெறுகின்ற விளைபொருட்கள்: அரிசி, சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, துவரம் பருப்பு, பயத்தம்பருப்பு, உளுந்து, தோலுடன் கூடிய நிலக்கடலை, சோயா பீன், சூரியகாந்தி, எள், நைஜர் விதைகள், பருத்தி, ஆறு வகை ரபி பயிர்களான கோதுமை, பார்லி, கொள்ளு, மைசூர் பருப்பு, கடுகு, சொம்பு மற்றும் இரண்டு வகை பணப்பயிர்களான சணல் மற்றும் கொப்பரை.

கூடுதலாக, ஒருவகை பீர்க்கை, நார் உரிக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றுக்கு, கடுகு மற்றும் சொம்புக்குக் கொடுக்கப்படுகின்ற விலை தரப்படுகின்றது.

கடந்த நான்கு ஆண்டுகளில் தரப்பட்ட ஆதரவு விலை குறித்த பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

இ, ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:

எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் (National Commissiona on Farmers), விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, விளைவிக்க ஆன செலவுடன் கூடுதலாக 50 விழுக்காடு தர வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது.

2018-2019 நிதி நிலை அறிக்கையில், குறைந்த அளவு ஆதரவு விலை என்ற முன் தீர்மானிக்கப்பட்ட கொள்கையை அறிவித்து இருக்கின்றது. அதன்படி, கட்டாயமாக, கரீப் மற்றும் ரபி, பணப்பயிர்களுக்கு, குறைந்த அளவு ஆதரவு விலை 50 விழுக்காடு கூடுதலாகத் தரப்பட்டு இருக்கின்றது.

அந்த நடைமுறை,2019-20 ஆம் ஆண்டிலும் பின்பற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக