செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பா.ஜ.க.வின் எடுபிடி அரசாக, தமிழக மக்களை வஞ்சிக்கிற அரசாக எடப்பாடி அரசு விளங்கி வருகிறது.- கே.எஸ்.அழகிரி


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.

தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து, 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். சசிகலாவின் விருப்பு, வெறுப்பின் காரணமாக பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி 16 பிப்ரவரி 2017 இல் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
கடந்த மூன்றாண்டுகளில் அவர் முதலமைச்சராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை என்று பேசப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கிற ஒருவர் பதவியில் நீடிப்பது என்பது பெரிய அதிசயமல்ல. ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடந்தால் வெற்றி பெற முடியாது என்பதால் அ.தி.மு.க. ஒன்றுபட்ட சக்தியாக இருந்து வருகிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்குகள் வித்தியாசம் வெறும் 5 லட்சம் தான். 1.1 சதவிகித வாக்குகள் கூடுதலாக பெற்று தான் ஜெயலலிதாவே முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

கடந்த மூன்றாண்டு காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசின் சாதனைகளை ஆய்வு செய்கிற போது, பல கசப்பான அனுபவங்கள் ஏற்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விட மாட்டோம் என்று சொன்னவர்கள், மத்திய பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு திணிப்பை 2016 முதல் ஏற்றுக் கொண்டு அமல்படுத்தி வருகிறார்கள். இதனால், தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படிக்கிற 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் வாய்ப்புகளை இழந்து வருகிறார்கள்.

2017 இல் நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த இரண்டு மாணவர்களும், அதுபோல, 2018 இல் அரசு பள்ளிகளில் படித்த 2583 மாணவர்களில் 39 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 3033 மாணவர்களில் பயிற்சி வகுப்புகளில் சேராத 48 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது. இத்தகைய அநீதி காரணமாகவே தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு என்பது தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவதற்காக 2015 இல் ரூபாய் 100 கோடி செலவில், சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா நடத்தினார். தொடர்ந்து 2019 ஜனவரியிலும் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அறிவித்தபடி முதலீடுகள் வந்ததா ? தொழில்கள் தொடங்கப்பட்டதா ? வேலை வாய்ப்புகள் பெருகியதா ? ஆனால், அறிவிக்கப்பட்ட முதலீட்டில் 50 சதவீதம் கூட முதலீடு செய்யப்படவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது. இதன்மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் தமிழக அரசு முழு தோல்வியடைந்திருக்கிறது.

சமீபத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9351 குரூப்-4 பணியாளர்களுக்காக 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கிறது. ஒரு வேலைக்கு 213 மனுக்கள் வந்திருக்கின்றன. தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணிக்காக 4600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுதான் எடப்பாடி ஆட்சியின் முத்திரைப் பதித்த மூன்றாம் ஆண்டு முதலிடத்திற்கான சான்றா ?

அதுமட்டுல்ல, தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஒரு கோடி பேர் காத்திருக்கிறார்கள். இதில் டாக்டர்கள் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 67 சதவிகித குடும்பங்களில் மாதச் சம்பளம் வாங்குகிற பணியில் எவரும் இல்லை. அதுபோல, தமிழகத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் வேலை வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்கள்.

தமிழக நலன்களை பாதிக்கிற, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, உதய் மின் திட்டம், ரயில்வே தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை, சிவகாசி பட்டாசுக்கு தடை, கரும்பு சாகுபடி குறைப்பு, குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவு என பல்வேறு நிலைகளில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2015-18 ஆம் ஆண்டு வரை வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றிற்காக தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 450 கோடி. ஆனால், நரேந்திர மோடி அரசு வழங்கியது வெறும் ரூபாய் 1370 கோடி. இதன்மூலம் மத்திய பா.ஜ.க. அரசிடம் வாதாடி அதிக நிதி பெற துணிவற்ற நிலையில் அ.தி.மு.க. அரசு உள்ளது.

தமிழக அரசின் நிதிநிலைமை படுபாதாளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் வரி வருவாய் ரூபாய் 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்கு ரூபாய் 64 ஆயிரத்து 529 கோடி. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ரூபாய் 96 ஆயிரத்து 271 கோடி. மானியங்கள் ரூபாய் 94 ஆயிரத்து 91 கோடி. கடனுக்கு வட்டி ரூபாய் 37 ஆயிரத்து 120 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூபாய் 21 ஆயிரத்து 617 கோடி. நிதி பற்றாக்குறை ரூபாய் 59 ஆயிரத்து 346 கோடி. இதற்கு கூடுதலாக 2011-12 இல் தமிழக அரசின் கடன் ரூபாய் 1 லட்சத்து 1 ஆயிரத்து 541 கோடியாக இருந்தது, 2020-21 ஆம் ஆண்டில் ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 661 கோடியாக பல மடங்கு கூடியிருக்கிறது. இந்த நிலையின் காரணமாகத் தான் தொழில் வளர்ச்சியை பெருக்கி, வேலை வாய்ப்பை உருவாக்குகிற வகையில் தொலைநோக்குப் பார்வையோடு அ.தி.மு.க. அரசால் பெரிய முதலீடுகள் செய்ய முடியவில்லை. மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3 லட்சம் கோடியையும் சேர்த்து தமிழக அரசு ஏறத்தாழ ரூபாய் 8 லட்சம் கோடி கடன் சுமையில் தவிக்கிறது. இதை மூடி மறைப்பதற்குத் தான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதனால் எந்த பலனும் ஏற்படாத நிலையில் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்காக நடைபெற்ற கடும் போராட்டத்தை தணிப்பதற்காகவே காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு கண்துடைப்பு நாடகமாகும். எனவே, எடப்பாடி அரசின் மூன்றாண்டு சாதனை என்று சொல்வதை விட, கடும் சோதனைகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். எனவே, தமிழக மக்கள் மிகுந்த வேதனையிலும், துயரத்திலும் வாழ்ந்து வருகிறார்கள். எப்பொழுது அடுத்த பொதுத் தேர்தல் வரும், அப்போது எப்படி அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எரிகிற வகையில் வாக்குகளை அளிக்கலாம் என மக்கள் தயாராக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் பா.ஜ.க.வின் எடுபிடி அரசாக, தமிழக மக்களை வஞ்சிக்கிற அரசாக எடப்பாடி அரசு விளங்கி வருகிறது. சாதனைகள் அறிவிப்பாக இருக்கிறதே தவிர, இதனால் மக்களுக்கு அ.தி.மு.க. அரசால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக