புதன், 12 பிப்ரவரி, 2020

திமுக மகளிர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


திமுக மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கனிமொழி MP அவர்கள் தலைமையில் நடைபெற்ற, திமுக மகளிர் அணி – மகளிர் தொண்டரணி – பிரச்சாரக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக:

பொருளாதார சீர்கேடு - வேலையில்லாத் திண்டாட்டம் - விவசாயிகள் படும் துன்பம் என நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய தலையாய பிரச்சினைகள் ஏராளம் இருக்கிறது. அதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல், குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற ஒன்றை தேவையில்லாமல் கொண்டு வந்து, அதை அவ்வளவு அவசரமாக இரவிலேயே நிறைவேற்ற அவசியம் என்ன வந்தது?


இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில், நிறைவேற்றப்பட்டிருக்கும் இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.


“கையெழுத்து இயக்கம்” மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு பாராட்டு:

அனைத்து மக்களையும் பாதிக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) - தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) - தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தயாரிக்கும் பணி, ஆகியவற்றை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, முடிவெடுத்து மாபெரும் “கையெழுத்து இயக்கம்” நாடு முழுவதும் நடத்துவதென அறிவித்தார். அறிவித்ததோடு நிற்காமல், களத்தில் இறங்கி, பொதுமக்களிடத்தில் பேருந்தில் - ஆட்டோக்களில் பயணிப்பவர்களிடமும் நேரில் சந்தித்து கையெழுத்துக்களைப் பெற்றார். கழகத் தலைவர் அவர்கள் ஒரு கோடி கையெழுத்து என்று அறிவித்திருந்தபோதும், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து, இக்கையெழுத்து இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டதின் மூலம் இதுவரை இரண்டு கோடிக்கும் மேல் கையெழுத்துகள் பெறப்பட்டிருக்கின்றது. இத்தகைய ஒரு அமைதிப் போராட்டத்தை அறிவித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு மகளிர் அணி தன் வாழ்த்துக்களையும் - நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.


குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் வகையில் வாசலில் கோலமிட்ட மகளிருக்கு நன்றி

குடியுரிமை திருத்தச் சட்டம் எனும் இந்த கறுப்புச் சட்டத்தை எதிர்க்கும் வகையிலும், பெண்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி., அவர்கள், “வேண்டாம் CAA, வேண்டாம் NPR, வேண்டாம் NRC” என வாசலில் கோலமிடுங்கள் என மகளிருக்கு அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.

அதனையேற்று, தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கான மகளிர் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு, இந்த அலங்கோல ஆட்சிக்கு எச்சரிக்கை விடுத்தார்கள். இத்தகைய ஒரு புதுமை புரட்சியை அறிவித்த, கனிமொழி,எம்.பி.க்கும் - கோலமிட்ட இலட்சக்கணக்கான மகளிருக்கும் இக்கூட்டம் தனது நன்றியையும் - பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.


புதிய கல்விக் கொள்கையை கைவிடுக:

மத்திய நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, கல்விக் கொள்கை பற்றி மாநில கல்வித் துறையிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் ஏற்கனவே பேசப்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றார். ஏற்கனவே, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு போன காரணத்தினால்தான், ‘நீட்’ தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் காரணமாக பல உயிர்களை இங்கே நாம் இழந்துள்ளோம். சமஸ்கிருதத்திற்கும் - இந்திக்கும் தமிழ்நாட்டில் முக்கிய இடம் கொடுப்பதற்காக, ஏற்கனவே மத்திய அரசு பல முயற்சிகளில் இங்கே ஈடுபட்டிருக்கிறது.

எனவே மீண்டும் புதிய கல்விக் கொள்கை என்று அறிவித்து, தமிழக மாணவர்களை அல்லல்படுத்தும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுமானால், அதை ஏற்றுக் கொள்ளாமல் மாநில அரசு எச்சரிக்கையுடன் இருந்து, தமிழக மாணவர்களின் நலன் காத்திட வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு:

தாழ்த்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தப்பட்ட/ பழங்குடியினருக்கு வேலை வாய்ப்புகளிலும் - பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு நம்மை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதுகுறித்து, “சீராய்வு மனு”வை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உடனடியாக தாக்கல் செய்து, சமூகநீதியை காத்திட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஊழல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் இதுவரை இல்லாத அளவில், மிகப் பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது வெட்கக் கேடானது. தவறு புரிந்தோர், யாராக இருப்பினும், உடனடியாக விசாரணை செய்து, அவர்களுக்கு சட்டப்படியான தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

வரலாற்றை திரிக்கும் விதமாக சிந்து சமவெளி நாகரீகத்தை ‘சரஸ்வதி நாகரீகம்’ என்று அழைப்பதா?

வரலாற்று வல்லுநர்களால் சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கப்பட்டு வருவதை, மத்திய நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, பாராளுமன்றத்திலேயே “சரஸ்வதி சமவெளி நாகரீகம்” என்று வரலாற்றையே மாற்ற முயற்சித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், அடுக்கடுக்கான வரலாற்று சான்றுகளை எடுத்து வைத்து, நாடாளுமன்றத்தில் முழங்கிய கனிமொழி, எம்.பி., அவர்களுக்கு, இக்கூட்டம் தனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக