புதன், 19 பிப்ரவரி, 2020

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றது முதல் உள்நாட்டு சுற்றுப் பயணங்களில் அக்கறை காட்டுவதை விட, அயல்நாடுகளில் சுற்றுப் பயணம் செய்வதில் மிகுந்த முனைப்பு காட்டி வருவதை அனைவரும் அறிவார்கள். சில நாளேடுகளில் இவரை வெளிநாட்டில் வாழ்கிற இந்திய பிரதமர் என்று கூட விமர்சனம் செய்ததுண்டு. நாடாளுமன்றம் நடைபெறுகிற காலத்தில் கூட வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட வித்தியாசமான பிரதமராக நரேந்திர மோடியை காண முடிந்தது. ஆனால், உலக நாடுகளோடு சுமூகமான சூழ்நிலை நிலவுகிறதா என்று ஆய்வு செய்தால் பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துக்கள் வருவதை தவிர்க்க முடியவில்லை.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவருக்கு கோலாகலமான வரவேற்பு கொடுப்பதற்கும், அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கும் இந்திய அரசு தீவிரமான முனைப்பை காட்டி வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திற்கு பிப்ரவரி 24-ந் தேதி வருகை தர இருக்கிற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத் நகரை அழகுபடுத்துவதற்காக ரூபாய் 80 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு வரவேற்பு கொடுக்க அகமதாபாத்தில் புதிதாக அரங்கம் கட்டப்பட்டு அங்கே தான் ‘நமஸ்தே டிரம்ப்” என்கிற சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெறுகிற இடத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் ஏழை, எளிய மக்கள் வாழ்கிற குடிசைப் பகுதி இருக்கிறது. அப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு வாழ்ந்து வருகிற குடிசைவாசிகளுக்கு அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் 7 நாட்களில் உங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு அந்தப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையென்றால் பலவந்தமாக நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள் என்று அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. வெளியேற்றப்பட்டவர்களுக்கு மறுகுடியிருப்பு உத்தரவாதம் கூட கொடுக்கப்படவில்லை. இத்தகைய கொடூரமான நிகழ்வு அந்தப் பகுதியில் வாழ்கிற ஆயிரக்கணக்கான மக்களிடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து அரசின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால், குஜராத் பா.ஜ.க. அரசு இதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க வரும்போது எந்த குடிசைப் பகுதியும் அவர் கண்ணில் படக்கூடாது என்பதற்காக 600 மீட்டர் தொலைவிற்கு தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்தச் செயல் குடிசைப் பகுதிகளில் வசிக்கிற ஏழை, எளிய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீண்டகாலமாக உள்ள குடிசைப் பகுதிகள் அமெரிக்க அதிபர் பார்வையில் படக் கூடாது என்று நினைக்கிற பா.ஜ.க.வின் மனோபாவம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகி அஸ்வதி ஜூவ்லா அந்த தடுப்பு சுவருக்கு அருகாமையில் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

குடிசைகளை மறைக்கும் தடுப்புச் சுவர்களை எழுப்பக் கூடாது, குடிசைப் பகுதிகளை அமெரிக்க அதிபர் பார்க்கக் கூடாது என்ற சிந்தனை சர்வாதிகார போக்கு கொண்டது. ஜனநாயக நாட்டில் இத்தகைய நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்ற நோக்கத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் நடத்தி வருகிறார். பா.ஜ.க. ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிற கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகியை தமிழ்நாடு காங்கிரஸ் பாராட்டுகிறது, போற்றுகிறது.

எனவே, இந்தியாவில் ஏழை, எளிய மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல முடியாத திறனற்ற நரேந்திர மோடி அரசு இத்தகைய எதேச்சதிகாரமான போக்கை கைவிட வேண்டும். இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகள் உலகம் அறிந்த ஒன்று. இதைத் தடுப்புச் சுவர் எழுப்பி, மூடி மறைப்பதன் மூலம் தம்மை தாமே ஏமாற்றிக் கொள்ள நரேந்திர மோடி முனைவது மிகுந்த நகைப்பிற்குரியது. இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக குஜராத் அரசு திரும்பப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக