வியாழன், 27 பிப்ரவரி, 2020

இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர்காய நினைக்கும் பா.ஜ.க - கே.எஸ்.அழகிரி


இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர்காய நினைத்த பா.ஜ.க.வின் பதுங்கு திட்டங்கள் தலைநகர் தில்லியில் அம்பலமாகியுள்ளன. வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த நான்கு நாட்களாக நீடித்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்திருக்கிறது.
250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தில்லி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும்படி தில்லி போலீசாருக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் உள்ளிட்ட அமர்வு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெறுப்பான பேச்சின் மூலம் வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தால் இத்தகைய உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும். இதற்கு முழுக்க முழுக்க காரணம் தில்லி காவல்துறை தான் என்று நீதிபதிகள் கடுமையாக குற்றம் சாட்டினர். 

தில்லியில் உள்ள ஷாகின் பாக்கில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிற பெண்கள் பங்கேற்கும் தொடர் போராட்டத்தை சகித்துக் கொள்ள முடியாத வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கட்சியினர் தூண்டி விட்ட வன்முறை தான் இவ்வளவு உயிரிழப்புகளுக்கும் காரணமாகும். பா.ஜ.க.வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா ஆற்றிய உரை சமூக ஊடகங்களில் பரவியதால் வன்முறை தலைவிரித்தாட ஆரம்பித்தது. இதுகுறித்த வழக்கை நேற்று இரவு 12.30 மணிக்கு விசாரித்த நீதிபதிகள், தில்லி போலீஸ் சார்பாக ஆஜரான துஷார் மேத்தாவிடம் கேட்ட போது, தான் அந்த வீடியோ காட்சியை பார்க்கவில்லை என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழக்கறிஞராக உள்ள துஷார் மேத்தாவை நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். உங்களைப் போன்றவர்களின் பொறுப்பற்ற போக்கு தான் தலைநகர் தில்லியில் நடந்த கலவரத்தை தூண்டியதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்று கடுமையான கண்டனங்களை நீதிபதிகள் வெளிப்படுத்தினர். 

தில்லி வன்முறை வெறியாட்டத்தை தடுக்கத் தவறிய காவல்துறை மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்ததற்காக தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் இரவோடு இரவாக பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு நேற்றே இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தில்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடுமையான ஆட்சேபனை தெரிவித்துள்ளன. தில்லியில் நடைபெற்ற கலவரத்தை எவரும் சகித்துக் கொள்ளவோ, பொறுத்துக் கொள்ளவோ முடியாத நிலையில் தான் நீதிபதி முரளிதர் தெரிவித்த காரணத்தால் மத்திய பா.ஜ.க. அரசால் பழிவாங்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதியே பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பேசுகிற அளவுக்கு நீதிமன்றத்தின் தரம் தாழ்ந்து வருகிற நிலையில் இத்தகைய பழிவாங்கும் போக்கு நடைபெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

மத்திய பா.ஜ.க. அரசு, அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத்துறை போன்ற அனைத்து நிறுவனங்களையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது நீதிமன்றத்தை அச்சுறுத்தி, அச்சத்தில் ஆழ்த்தி வருகிற செயலில் ஈடுபட்டிருப்பதை விட ஜனநாயக, சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளை பாதுகாக்கிற ஒரே அமைப்பாக இருக்கிற நீதிமன்றங்களும் மிகப்பெரிய தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் நரேந்திர மோடி - அமித்ஷா கூட்டணியின் அதிகார அத்துமீறலால் பலியாகி வருகிறது. 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற செயற்குழுவில் தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தங்களது உரிமைகளை பாதுகாப்பதற்காக ஜனநாயக வழியில், அமைதியாக பெருந்திரளாக போராடிக் கொண்டிருக்கிறவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு, 27 பேர் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கு முழு பொறுப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா தான். 
எனவே, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் இடமாற்றம் என்பது நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது. முதற்கட்டமாக தில்லியில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக