மாநில கால்நடை பராமரிப்பு அமைச்சர்களுடனான தேசிய அளவிலான காணொலி கூட்டத்திற்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா இன்று தலைமை வகித்தார்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர்கள் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான் மற்றும் டாக்டர் எல் முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு குறித்து வலியுறுத்தியதோடு, கால்நடை மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேசுகையில், “பிரதமர் திரு நரேந்திர மோடியின் துடிப்பான தலைமையின் கீழ், நமது நாட்டின் கால்நடை துறை 2014-15 முதல் 2019-20 வரை ஒரு ஆண்டுக்கு சராசரியாக 8.15% எனும் அளவில் வளர்ந்து வருகிறது. பொருளாதாரத்தின் மற்ற துறைகளை விட இது அதிகமாகும். இந்த துறையின் பெரும் சாத்தியக்கூறுகளை இது காட்டுகிறது,” என்றார்.
திட்ட செயல்படுத்தலின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் துறையுடன் இணைந்து இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கியால் (சிட்பி) உருவாக்கப்பட்ட தேசிய கால்நடை இயக்க இணைய தளத்தை நிகழ்ச்சியின் போது மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பால், முட்டைகள், இறைச்சி மற்றும் கம்பளி பொருட்களின் உற்பத்தி மதிப்பீடுகள் குறித்த தரவுகளைக் கொண்ட “அடிப்படை கால்நடை பராமரிப்பு தகவல்கள் -2020” எனும் அறிக்கையையும் அமைச்சர் வெளியிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக