ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

இந்திய அரசின் முக்கிய திட்டங்களான கேலோ இந்தியா, ஃபிட் இந்தியா ஆகியவை கலந்துரையாடலின் ஒருங்கிணைந்த அம்சமாக தொடர்ந்து நீடிக்கும்.- திரு அனுராக் சிங் தாக்கூர்


 இந்தியாவில் விளையாட்டுகளை மேலும் ஊக்குவிப்பது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு அமைச்சர்களுடன் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் திங்கட்கிழமை அன்று காணொலி வாயிலாக உரையாடுவார்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவை உயரிய விளையாட்டு தேசமாக உருவாக்குவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எதிர்கால திட்டங்கள் மற்றும் பங்களிப்பு குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது திரு அனுராக் சிங் தாக்கூர் கேட்டறிவார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை  இணை அமைச்சர் திரு நிசித் பிரமாணிக்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்.

இந்திய அரசின் முக்கிய திட்டங்களான கேலோ இந்தியா, ஃபிட் இந்தியா ஆகியவை கலந்துரையாடலின் ஒருங்கிணைந்த அம்சமாக தொடர்ந்து நீடிக்கும்.

விளையாட்டு, மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுவதால், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் திறன் வாய்ந்த மற்றும் பாரா வீரர்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அடிமட்ட அளவில் திறமை வாய்ந்த வீரர்களைக் கண்டறிய மாநிலங்களை ஊக்கப்படுத்துவதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலோ இந்தியா விளையாட்டுகள், இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளை அடிமட்ட அளவில் மாற்றி அமைத்துள்ளது. அப்போது முதல், இளைஞர்களுக்காக, பல்கலைக்கழகம் மற்றும் குளிர்காலப் போட்டிகள் அடங்கிய பல்வேறு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் துவக்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கமும், ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம், ஃபிட் இந்தியா செல்பேசி செயலி, ஃபிட் இந்தியா வினாடி வினா உள்ளிட்ட பிரச்சாரங்களின் வாயிலாக உடற்தகுதி பழக்கவழக்கங்களை புகுத்துவதில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக