சனி, 1 பிப்ரவரி, 2020

அதிமுக ஆட்சியின் அனைத்து மெகா ஊழல்கள் குழிதோண்டி புதைக்கப்படும் அபாயம் உள்ளது - ஆர்.எஸ்.பாரதி


'முழு விசாரணைகள் உடனே நடக்காவிட்டால், அதிமுக ஆட்சியின் அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் மெகா ஊழல்கள் குழிதோண்டி புதைக்கப்படும் அபாயம் உள்ளது" - ஆர்.எஸ்.பாரதி, எம்.பி, .

தமிழகத்தின் ‘வியாபம்’ எனப் பெயர் பெற்றிருக்கும் டி.என்.பி.எஸ்.சி.யின் முறைகேடுகள் இன்று-நேற்று என்றில்லாமல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திதிலிருந்தே தொடர்ந்து வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தற்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஆனால் இது திடீரென நடந்த முறைகேடு அல்ல என்பதும் தற்போதைய விசாரணைகளில் தெரிய வந்திருக்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் மோசடி என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தே, அதாவது கடந்த 9 ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளது.


குரூப் 1 பதவிகளான மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக 2016ஆம் ஆண்டு ஜூலை 29, 30 மற்றும் 31 தேதிகளில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 62 பேர் சென்னை தி நகரில் உள்ள ஒரே மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என அப்போதே கூறப்பட்டது. அவற்றில் 22 விடைத்தாள்களில் பதிவு எண்கள் அழிக்கப்பட்டு, புதிதாக பதிவெண்கள் எழுதப்பட்டன என கூறப்பட்டது. மூன்று பேர்களின் விடைத்தாள்கள் கிழிக்கப்பட்டு, வேறு சில பக்கங்கள் இணைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜெய்சிங் தலைமையிலான அதிகாரிகள், மூன்று பேரின் விடைத்தாள்களில் ஒரே கையெழுத்து இருப்பதை தடயவியல் சோதனைக்கு பின்னர் கண்டறிந்தனர். அதனை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அப்போது வேகமெடுத்த அந்த வழக்கின் விசாரணையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் பின்னர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன் பின்னர் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இதற்கு காரணம் யார் ? இந்த உத்தரவு எங்கிருந்து வந்தது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் இன்று வரை பதில் இல்லை.

அதேபோல, தற்போது குரூப்-4 தரவரிசை பட்டியல் வெளியான போது இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்த முறைகேடு குறித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதிலும் தோண்டத் தோண்ட பூதங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இது வரை இந்த வழக்கில் இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடாக தேர்வு எழுதிய தேர்வர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ஜெயகுமார் தலைமறைவாக இருக்கிறார். இவ்வளவு நடைபெற்றும் தேர்வினை முழுமையாக ரத்து செய்ய முடியாது, தவறு செய்தவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் ஜெயகுமார் கூறுகிறார்.

99 பேருக்கு தடை, 16 பேர் கைது, இன்னமும் சிலர் கைதாக வாய்ப்பு என்பதோடு இந்த வழக்கை முடிக்க அவசரகதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் மூலம் இதில் தொடர்புடைய ஆளும் கட்சி முக்கிய புள்ளிகளை காப்பாற்ற இந்த அரசு பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறது என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளுக்காக, 2015-ம் ஆண்டு குரூப் 1 தேர்வு முடிவுகள் 2016-ல் வெளியிடப்பட்டது. இதில் ஸ்வப்னா என்ற திருநங்கை, தான் நன்றாக தேர்வு எழுதியும், தேர்வாகவில்லை எனக்கூறி, மறுமதிப்பீடு செய்ய விடைத்தாள் கேட்டு கூசூஞளுஊ அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு விடைத்தாள்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், விடைத்தாள் வழங்க மறுத்த வழக்கில், திருநங்கை ஸ்வப்னா சுட்டிக்காட்டினார். இதைக் கேட்ட நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையின் பேரில், சென்னையில் உள்ள அப்போலோ பயிற்சி மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அந்த பயிற்சி மைய இயக்குனர் சாம் ராஜேஸ்வரன் மற்றும் கூசூஞளுஊ அலுவலக ஊழியர் காசி ராம்குமாருக்கும், விடைத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காசி ராம்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், வினாத்தாள்களை தயார் செய்யக்கூடிய பேராசிரியர்களுக்கும், முறைகேட்டில் தொடர்பு இருப்பது அம்பலமானது. அப்போலோ பயிற்சி மைய இயக்குனர் சாம் ராஜேஸ்வரன் மீதான குற்றச்சாட்டு உறுதியானால், கூசூஞளுஊ தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தேறிய பெரும்பாலான மாணவர்கள் இந்த அப்போலோ பயிற்சி மையம் மற்றும் சைதை துரைசாமி நடத்தும் மனிதநேயம் அகாடமியைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. ஓரிரு பயிற்சி மையங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதன் நடைமுறை உண்மை என்ன என்பது ஆய்வுக்கும் விசாரணைக்கும் உரியவையாகும். இதை எல்லாம் சிபிசிஐடி உரிய முறையில் விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக