சனி, 21 மார்ச், 2020

கொரோனா கட்டுப்படுத்துவதற்காக, அரசின் சார்பில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு போதுமா? - மு.க.ஸ்டாலின்


”மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த சோதனைகள் குறைவாக இருக்கிறதா?
 அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்களா எனும் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்” 
-  மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் வலியுறுத்தல்.

1,98,741 பேர்களிடம் மட்டுமே கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

அதேபோல் கண்காணிப்பில் 4,253 பேர் இருப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார். நான் கேட்கிற கேள்வி அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டிருக்கிறதா இல்லையா?

படுக்கைகள் 1,120 மட்டுமே இருப்பதாக அமைச்சர்கள் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 32 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாகவும், கூறியிருக்கிறார். கொரோனா பாதிப்பு 3 பேருக்கு மட்டுமே இருப்பதாகவும், 27 பேருக்கு இன்னும் சோதனை முடிவு வர வேண்டியுள்ளது என்றும் சொல்லி இருக்கிறார். தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளான 3 பேரின் நிலை என்ன? அதில் இரண்டாவதாக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தவர்களின் நிலை எப்படி இருக்கிறது? அவருடன் பயணித்த, தொடர்பில் இருந்த அனைவரும் கண்டு பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்களா என்ற விவரத்தை அமைச்சர் அவர்கள் இந்த அவையில் தெரிவிக்க வேண்டும்.


மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நம்முடைய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறியும் சோதனை குறைவானதாக இருக்கிறது என்ற ஒரு கருத்து இருக்கிறது. அனைவரும் சோதனை செய்யப்படுகிறார்களா என்ற உண்மை நிலையை இந்த அவைக்கு தெரிவிக்க வேண்டும். வருமுன் காக்கும் திட்டத்தின் அடிப்படையில் - அந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக, நம் மாநிலத்தில் முழு அளவிலான ஐசியுக்கள் எத்தனை இருக்கிறது?

கொரோனா பாதிப்பு அச்சுறுத்தலை தொடர்ந்து, அது மாவட்ட வாரியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறதா?

பரிசோதனைக்காக பயன்படுத்தும் டிபிஐ கிட்ஸ் 40,000 வாங்க போவதாக நம் அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம். அந்த எண்ணிக்கை போதுமா?

அதை அதிகம் கொள்முதல் செய்வதிலே என்ன சங்கடம் இருக்கிறது?

இப்போதுள்ள சாம்பிள்களில் எத்தனை ஆய்வகங்களில் நாம் எவ்வளவு பரிசோதிக்க முடியும்?

அந்த வசதியை அதிகரிக்க அரசு ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறதா?

கொரோனா மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படுவதால் வெண்ட்டிலேட்டர் வசதி உள்ள படுக்கைகள் உள்ள மருத்துவமனைகள் எத்தனை? வெண்டிலேட்டர் படுக்கை உள்ள வசதிகளை மாவட்டந்தோறும் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கனவே இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக, அரசின் சார்பில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு போதுமா?

என்னை கேட்டால் அதற்காக இன்னும் 500 அல்லது 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினால் கூட தவறில்லை என்று கருதுகிறேன்.

முழு வசதிகளோடு ஐசியு செயல்பட, வெண்டிலேட்டர்கள், டிபிஐ கிட்ஸ்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்கு அரசு முன்வருமா என்பதை தங்கள் மூலமாக இந்த அரசை கேட்டு அமர்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக