சனி, 21 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்போம்.- எம்.எச்.ஜவாஹிருல்லா


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்போம். தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்! - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

உலகளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி பெரும் பாதிப்பையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதற்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியாக நாளை (22.3.2020) “சுய ஊடரங்கு” நடைபெற உள்ளது. இந்த சுய ஊரடங்கு நிகழ்வுக்குப் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.


மார்ச் 22 மட்டுமல்லாமல் இந்த வைரஸ் பாதிப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொதுமக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க இரவு பகலாகத் தன்னலம் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர், சமூகப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்கள் நலமுடன் மேலும் சிறப்பாகப் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் பிரார்த்திப்போம்.

இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, நடுத்தர மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் அறிவித்த திட்டங்கள் வரவேற்கத்தக்கது. அதுபோன்ற திட்டங்களைத் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதேபோல், நாடு முழுவதும் இந்த வைரஸ் தடுப்பு நடடிவக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசும் உரியத் திட்டங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக