வெள்ளி, 20 மார்ச், 2020

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 9 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - எடப்பாடி கே.பழனிசாமி


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கீழ்க்கண்ட 9 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.

  1. மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.
  2. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.
  3. 22.3.2020 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொது மக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு (Janata Curfew) உத்தரவைப் பின்பற்ற வேண்டும்.
  4. கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், ராணுவம், விமான நிலையம் மற்றும் பிற துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 22.3.2020 அன்று மாலை 5 மணிக்கு மணியோசை மூலமும், கைதட்டியும் நன்றி தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  5. சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் செல்வதை தவிர்க்கவும், அறுவை சிகிச்சை செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அதை முடிந்த வரை தள்ளி வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. 
  6. மத்திய நிதி அமைச்சர் தலைமையில் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க பொருளாதார மீட்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  7. வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், தோட்டப் பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தக் கூடாது.
  8. பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
  9. வதந்திகளை நம்ப வேண்டாம்.
அதன்படி, 22.3.2020 அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் எதுவும் இயங்காது என்பதையும், மெட்ரோ ரயில்களும் அன்றைய தினம் இயங்காது. என்பதையும், அன்று மாலை 5 மணிக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளபடி, தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அனைவருக்கும் மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் நூலகங்கள் நாளை முதல் 31.3.2020 வரை மூடப்படும். மாண்புமிகு பாரதப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, பொது மக்கள் மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து வரும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, கொரோனா வைரஸ் நோயை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக