வியாழன், 19 மார்ச், 2020

போக்குவரத்து நெரிசலை தீர்க்க பாலம் அமைக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்” - மு.க.ஸ்டாலின்


கொளத்தூர் பிரதான சாலை - ஔவையார் நகர் மற்றும் ஐசிஎப் கனால் சாலையை இணைக்கும் பகுதியின் போக்குவரத்து 
நெரிசலை தீர்க்க பாலம் அமைக்கும் பணியை போர்க்கால 
அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்” -  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கொளத்தூர் பிரதான சாலை, ஔவையார் நகர் மற்றும் ஐசிஎப் கனால் சாலையை இணைக்கக்கூடிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் தொடர்ந்து பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

நான் முதன்முதலாகச் சட்டமன்ற உறுப்பினராக அந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், அந்த பகுதியில் இருக்கும் மக்கள் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் 16.01.2015 அன்று, அப்போதைய மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு சுரேஷ் பிரபு அவர்களுக்கு அந்தப் பகுதியில் பாலம் கட்டவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் கடிதம் அனுப்பி வைத்திருந்தேன்.


அந்த கடிதத்தின் தொடர்ச்சியாக 11.06.2015ஆம் ஆண்டு என்னுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்காக 7.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அந்த திட்டம் எடுத்துக்கொள்ளப்படுவதாக எனக்குக் கடிதம் வந்தது. தொடர்ச்சியாக இந்த மாமன்றத்தில் இந்த பிரச்சினை குறித்து 4 முறை பேசி அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறேன். தற்போது இந்த பாலம் அமைப்பதற்கு தேவையான 1,230 சதுர மீட்டர், அதோடு சேர்ந்த 800 சதுர மீட்டர் கட்டிடத்தை இடிப்பதற்கு ரூபாய் 10.75 கோடி ரூபாயை ஐசிஎப் நிறுவனம் கோரியிருக்கிறது.

தற்போது ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தையும் பயன்படுத்தும் காரணத்தால், 15.36 கோடி ரூபாய் ஐசிஎப் நிறுவனம் கோரியுள்ளதாக எனக்குச் செய்தி வந்திருக்கிறது. எனவே இந்தப் பணி வேகமாக நடைபெற ஐசிஎப் நிறுவன பொது மேலாளரைச் சந்திப்பதற்காக எங்களது வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை அனுப்பி இதுகுறித்து நினைவுபடுத்தி வலியுறுத்திச் சொல்லி இருக்கிறேன்.

தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடமும், எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினரை அனுப்பி இது குறித்து விவரம் கேட்டுள்ளோம். இதற்கு ஏற்கனவே ரயில்வே துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில், 30.05.2020க்குள் ரயில்வே துறை சார்ந்த அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, தற்போது 10.09.2019 அன்று இந்த பணிக்குரிய ஆணையைச் சென்னை மாநகராட்சி வழங்கி உள்ளது. எனவே உடனடியாக ஐசிஎப் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்படுமா? அல்லது ஏற்கனவே நிர்ணயித்த தொகையில் அந்த பணியை மேற்கொள்ள ஐசிஎப் நிறுவனம் அனுமதித்துள்ளதா என்பது குறித்த அந்த முடிவை எடுக்க வேண்டும். அன்றாடம் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெரிசல் மற்றும் சங்கடங்களைக் களைவதற்கு, இந்த ஆண்டிற்குள்ளாவது போர்க்கால நடவடிக்கை எடுத்து, பாலம் கட்டும் பணியை நிறைவேற்றித் தருவதற்கு இந்த அரசு முன்வரவேண்டும் என்று அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கேட்டு அமர்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக