செவ்வாய், 24 மார்ச், 2020

இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன? மதுரை மக்களுக்கு அன்பான வேண்டுகோள்; சு.வெங்கடேசன்


மதுரை மக்களுக்கு அன்பான வேண்டுகோள்; - சு.வெங்கடேசன் MP

மதுரையில் முதல் கரோனா தொற்று ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது. "சமூக பரவல் இன்னும் இல்லை" என அரசு அதிகார இயந்திரங்கள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்க, அறிவியலாளர்கள் ஆய்வு வட்டம் நாம் சமூக பரவல் நிலைக்கு வந்துவிட்டோம் என வலுவாய்ச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

இந்தியாவில் 40-50% மக்கள் இத்தொற்றுக்குள் செல்வர் என்பது உலக அறிஞர்கள் பலரின் கருத்து. அந்த அத்தனை பேரும் நோயாளிகள் ஆகப்போவது இல்லை. மிகச் சொற்பமான சதவீதம்தான் நோய்வாய்ப்பட போகிறது. அந்த சொற்பத்துக்குள் சிக்காமலிருக்க இப்போதைக்கான முதல் தீர்வு வெளியில் உலவுவதை நிறுத்துவது.

உலகெங்கும் வரும் ஆய்வு முடிவுகள் எல்லாம் இந்த இக்கட்டான சூழலிலும் நம்பிக்கை அளிப்பவையாகவே உள்ளன. நோபல் விஞ்ஞானியும் இங்கிலாந்தின் நோய்த் தடுப்பு பேராசிரியர் மைக்கேல் லெவிட்ட் " இலகுவாய் இதனை கடந்து போவோம்; இப்போதே வைரசின் உக்கிர வீரியம் குறையத் துவங்கியுள்ளதன் தெள்ளத் தெளிவான அடையாளங்கள் தெரிகின்றன" என்கிறார். அவர்தான் "சீனத்து வுகானின் 82000 பேர் தொற்று பெறுவர் ; 3250 பேர் உயிரிழப்பர்", என மிக தெளிவாக மருத்துவ அல்காரிதத்தில் அளவிட்டுச் சொன்னவர். 100% அவரது அனுமானம் உண்மையானது. அவர் நம் ஊர் ஜோசியர் அல்லர். மருத்துவ புள்ளியியல்பரவுநிலை ஆய்வாளர். அவர் சொல்வது சீக்கிரம் "இதனை கடந்து சென்றுவிடுவோம்; அதற்கு ஒரே இப்போதய தேவை சமூக இடைவெளி மட்டுமே.,"என்பதுதான்


நமது வேலூர் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியரும் நோய்பரவுதல் குறித்த அறிஞருமான டாக்டர் ஜெயப்பிரகாஷ் முல்லையில் "உண்மையை மறைப்பதில் பிரயோஜனமில்லை; உண்மை விவரங்கள் ஒன்றே மக்களை இந்நோயில் இருந்து காத்துக்கொள்ள தயாராக்கும்" என சொல்லியுள்ளார். கூடவே இப்பவும் நாம் "அன்னியப்பட்டு ஒதுங்கி இருந்து சமூக இடைவெளியை அதிகமாக்குதல்" ஒன்றே நம்குடும்பத்தை,நம் ஊரை தேசத்தை, பாதுகாக்கும் என்கிறார்.

மதுரை மக்களுக்கு என் வேண்டுகோளெல்லாம்

1. பீதியோ பதட்டமோ ஓலமோ வேண்டாம். அறியாமை தான் பதறும். விழிப்புணர்வு அமைதியாய் ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடும்.
2. எக்காரணம் கொண்டும் கூட்டம் வேண்டாம். குடும்பத்தோடு வீட்டில் இருங்கள்.
3. உணவு காய்கறிகள் கண்டிப்பாய் எல்லா நாளும் கிடைக்கும். பதட்டத்தோடு இன்றே வாங்க முந்தி கூட்டம் சேர்க்க வேண்டாம். பதட்டத்தில் நாம் சேர்க்கும் கூட்டம் பல நூறு புதிய கரோனா தாக்குதலுக்கு இடமளிக்கும்.
4. எந்த சுய வைத்தியத்தையும் தற்காப்பு என பதட்டத்தில் சாப்பிட வேண்டாம். இணையத்தில் வரும் பல சந்தர்ப்பவாத கூச்சல்களை மருந்தென நம்பி சிக்கிக் கொள்ளவேண்டாம்.
5. உங்கள் சர்க்கரை அளவு, இரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கிறதா? என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கரோனா பாதிப்படைவோரில் கணிசமானவர் இந்நோயை கட்டுப்பாட்டில் வைக்காத வயோதிகர் மட்டுமே


அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை, இதுவரை எப்படி அது செயல்பட்டதோ அதில் இருந்து சட்டெனமாறி ஒரே நாளில் பாய்ச்சல் வேகத்தை எட்டிவிடாது. எனவே அதீத நம்பிகைகொண்டு ஏமாற்ற மடைய வேண்டாம். அதே நேரம் இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது நமது பொது சுகாதார கட்டமைப்பு மேம்பட்டது. இந்த இரண்டு உண்மையையும் நாம் புரிந்து கொள்வது முக்கியம்.

நமது மாவட்டத்தில் வருடத்துக்கு ஆறு மாதத்துக்கும் குறைவான வேலைவாய்ப்பு உள்ள விழிம்புநிலைப்பணியாளர்கள் 1 80 730 பேர், விவசாயக்கூலித்தொழிலாளர்கள் 2 87 731 பேர், சிறுகடைகளில் வேலைசெய்வோர் 39 753 பேர். இதுதவிர வீடற்றவர்கள், குடும்பமற்றவர்கள். அனைத்துவகையான விளிம்புநிலை மக்கள் என சுமார் ஏழு லட்சம் மக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரின் வாழ்வியல் உத்தரவாதம் அரசின் நிவாரண நடவடிக்கையை முழுமையாக சார்ந்துள்ளது.

அரசு நிர்வாகம் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சை வழங்கும் நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் வேலையிழந்த, பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கான நிவாரண நடவடிக்கையில் முழு கவனம் செலுத்தவைக்க நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பங்கு முழுமையாக இருக்கும். அதே நேரம் இது சமூகப்பிரச்சனையாக மாறி நிற்கும் ஒவ்வொரு தனிநபரின் உடல்நலம் சார்ந்த பிரச்சனை. எனவே நமக்கான நமது கவனம் மிகமிக முக்கியம்.

மதுரை நெரிசலுக்குப் பெயர் போனது. நம் நெரிசல் நம் பண்பாடு; நம் வாழ்வியல் கூறு. ஆனால் அந்த வாழ்வியல் பழக்கத்தை மாற்றி நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். "மாமா மச்சான்" என அந்நியோன்யமாயிருந்த கூட்டம் விலகி அன்னியப்பட்டு இருக்க வேண்டியுள்ளது இந்த காலத்தின் கட்டாயம். இத்தாலியின் மிலன் நகரமும் வெனிசும் நம் மதுரையின் வீதிகள் போன்றதுதான். அதன் பண்பாட்டு வெளி நம் மதுரைக்கு அணுக்கமானதுதான். ஆனால் இப்போது அங்கெல்லாம் கேட்கும் மரண ஓலத்துக்கும் வழியில்லாமல் வயோதிகத்தை "செல்லட்டும்" என விட்டுச்சென்ற கண்ணீர் காலம் வந்தமைக்கு ஒரே காரணம் நெருங்கி இருந்ததும் முன்னெச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதும்தான்.

உலகின் பிறநாடுகளிலும், நகரங்களிலும் இருந்து பாடம் கற்போம். தனித்திருப்போம், விழித்திருப்போம், வரும் நாட்களில் இழப்பின்றி நகர தெளிவு கொண்டிருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக