ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

தமிழக பாரா தடகள வீரர் மாரியப்பன் மற்றும் அவரது பயிற்சியாளருக்கு மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தில்லியில் பாராட்டு


 டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் 2020 போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த டி. மாரியப்பன் மற்றும் அவரது பயிற்சியாளர் பி. ராஜாவிற்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் புதுதில்லியில் இன்று பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர், “ரியோ மற்றும் தற்போது டோக்கியோவில் தனது சிறப்பான செயல்திறனின் வாயிலாக மாரியப்பன், நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், மிகச் சிறப்பாக விளையாடிய நமது அனைத்து பாரா தடகள வீரர்களுக்கும் இந்தத் தருணத்தில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று கூறினார்.

அமைச்சரிடம் பேசிய மாரியப்பன், “இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என்று எதிர்நோக்கியிருந்தேன். ஆனால் போட்டியின் போது அங்கு நிலவிய வானிலை காரணமாக அந்தக் கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. பாரிசில் நடைபெறும் போட்டியில் நாட்டிற்காக நிச்சயம் தங்கம் வெல்வேன் என்று நம்புகிறேன்”, என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக