செவ்வாய், 21 ஜனவரி, 2020

ரஜினி மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். - கலி.பூங்குன்றன்


தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய உண்மைக்கு மாறான கருத்தால் பெரியாரைப் பின்பற்றுபவர் களின் மனதைப் புண்படுத்தி விட்டார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரி யாரின் பற்றாளர்கள் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்" .


துக்ளக் 50வது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி துக்ளக்கில் வெளிவந்தது எனக் கூறிவிட்டு இன்று அவுட்லுக் பத்திரிக்கையில் வெளிவந்தது எனக் கூறுகிறார். இதன்மூலம் ரஜினி அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசுகிறார் என்பது வெளிப்பட்டுள்ளது.

அவர் நியாயமாக துக்ளக் இதழை எடுத்துக்காட்டி இருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. இதன்மூலம், துக்ளக் இதழில் அவ்வாறு வெளிவரவில்லை, வெளிவந்ததாக பொய்யை ரஜினிகாந்த் சொல்லியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பெரியாரை நோக்கி செருப்பு வீசப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ரஜினி பதிலளிக்கவில்லை. பெரியாரை நோக்கி ஜனசங்கத்தினர் செருப்பை வீசினார். அதற்கு எதிர்வினையாக திராவிடர் கழகத் தொண்டர்கள், ராமர் படத்தை செருப்பால் அடித்தனர்.

மறுக்க முடியாது மறக்க வேண்டியது எனக் கூறுகிறார். மறக்க வேண்டியது என்றால் ஏன் அதை மறுபடியும் நினைவுட்டுகிறார். ரஜினியை பாஜக பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. பெரியாரை மையப்படுத்தி எதிர் அரசியலை நடத்த திட்டமிடுகிறார்கள்.

ரஜினி முன்னுக்குபின் முரணாக பேசுகிறார். சரியான தகவலை தெரிந்துகொண்டு பேசவில்லை. மேலும், இந்தச் சம்பவத்தால் அந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரிய கெட்டப்பெயர் வந்தது எனக் கூறினார். ஆனால், அதன் பிறகு நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.வரலாறு தெரியாமல் அரைகுறையாக ரஜினி பேசுவது அவரது அறிவு நாணயமற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.

தவறாக சொல்லியிருக்கிறோம் என தெரிந்த பின் அவர் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ரஜினி மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எடுக்கவில்லை என்றால் இந்த அரசு பெரியாரைப் பற்றி ரஜினி கூறியதற்கு ஆதரவாக இருக்கிறது என பொருள் கொடுத்துவிடும். அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக