வியாழன், 2 ஜனவரி, 2020

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை.


மத்திய பா.ஜ.க. அரசு, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிராக ஜாதி, மத, இன எல்லைகளைக் கடந்து அனைவரும் ஓரணியில் திரண்டு கடும் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணியின் சார்பாக பிரம்மாண்ட கண்டனப் பேரணி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டதற்காக 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தமிழக அரசு வழக்கு தொடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து போராட்டம் தமிழகம் முழுவதும் பல்வேறு நிலைகளில் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற ஆராய்ச்சியாளர்  அப்பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலம் போட்டதற்காக கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். அந்த நடவடிக்கைக்குப் பிறகு குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் போர்க்கோலம் பூண்டது, மத்திய - மாநில ஆட்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மகளிர் சமுதாயத்தினரின் கோலம் போடுகிற எழுச்சிப் போராட்டத்தை தடுக்கும் வகையில் ஆராய்ச்சியாளர் காயத்ரி மீது பொய் வழக்கு போடுவதற்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆராய்ச்சியாளர் காயத்ரி பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்பு கொண்டவர் என்றும், அவர்மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஆணையர் மேலும் கூறியிருக்கிறார். ஆனால், ஆராயச்சியாளர் காயத்ரி ஒரு அமைப்பின் மூலமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, மாலத்தீவு ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாத்தை நிராகரிக்கும் மக்கள் மீது அந்தந்த அரசுகள் காட்டும் பாரபட்சம் பற்றியே அவரது ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் உள்ள 80 பக்கங்களில் எந்த பக்கம் பாகிஸ்தானுக்கு ஆதரவானது என்பதை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். மேலும், அவர் சார்ந்துள்ள அமைப்பு பாகிஸ்தான் ஆதரவு அமைப்பல்ல. அவரது அமைப்பு பாகிஸ்தானில் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு இயக்கமாகும்.

தமிழக ஆட்சியாளர்களை மகிழ்விக்க வேண்டுமென்ற நோக்கத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர் காயத்ரி மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் முனைவது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகும். இத்தகைய ஜனநாயக, சட்டவிரோத செயலுக்கு காவல்துறை ஆணையர் துணை போகக் கூடாது.

மேலும், கோலம் போட்டு எதிர்ப்பைத் தெரிவிக்கிற வகையில் தமிழ்நாடே போர்க்கோலம் பூணுவதை சகித்துக் கொள்ள முடியாத அமைச்சர் பாண்டியராஜன், ‘கோலம் போடுறவங்கள பார்த்தா, குடும்பத் தலைவி மாதிரி தெரியல” என்று கூறியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. இத்தகைய அரசியல் நாகரீகமற்ற கருத்துக்களை, குறிப்பாக, பெண் இனத்திற்கு எதிராக கூறியிருக்கிற அமைச்சர் பாண்டியராஜன் தமது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே, ஆராய்ச்சியாளர் காயத்ரி மீதான இத்தகைய விசாரணைகளை உடனடியாகத் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக காவல்துறை ஆணையரை கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக