செவ்வாய், 21 ஜனவரி, 2020

இரயில்வே துறையைத் தனியார் மயம் ஆக்கக் கூடாது! - வைகோ



         இரயில்வே துறையைத் தனியார் மயம் ஆக்கக் கூடாது! - வைகோ 

பாரதிய ஜனதா கட்சி அரசு, கடந்த ஆண்டு இரண்டாவது முறையாகப் பொறுப்பு ஏற்றவுடன், உடனடியாக நூறு நாள் செயல் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதில் முதன்மையாக, இரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பு இடம் பெற்று இருந்தது.


இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, கடந்த 2019 ஜூலை 12 ஆம் தேதி இரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பதில் அளிக்கும்போது, “இரயில்வேத்துறை தனியார் மயம் ஆக்கப்படும் என்ற கேள்விக்கே இடம் இல்லை; இரயில்வேத்துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே தனியாரின் பங்கு கோரப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.

ஆனால், அதற்கு மாறாக, கடந்த ஆண்டு 2019 செப்டம்பர் 23 ஆம் தேதி, மத்திய அரசு சார்பில் இந்தியத் இரயில்வே வாரியம், 6 மண்டலங்களின் தலைமை மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், 150 வழித்தடங்களைக் குறிப்பிட்டு, அவற்றில் உடனடியாக தனியார் இரயில்களை இயக்குவதற்கு எந்தெந்த வழித்தடங்களைத் தேர்வு செய்யலாம் என கருத்துக் கேட்டு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது இரயில்வேத்துறை சீரமைப்பு தொடர்பாக ‘நிதி ஆயோக்’ வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. ரூ. 22 ஆயிரம் கோடி முதலீட்டில் 100 நகரங்களுக்கு இடையே 150 தனியார் இரயில்ககளை இயக்குவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த முடிவு எடுத்து இருப்பதாக ‘நிதி ஆயோக்’ கூறி உள்ளது. இதற்கான திட்ட விவரங்கள், கட்டணம் போன்றவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக தெற்குத் இரயில்வே அதிகாரிகள் கூறியதாக, இந்து தமிழ் திசை நாளேடு (ஜனவரி 19, 2020) விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 150 தனியார் இரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்து, அதற்கான பணிகளை இரயில்வேத்துறை மேற்கொண்டு வருகின்றது. சென்னையில் இருந்து ஜோத்பூர் வாரம் ஒருமுறை, மும்பை பன்வல் வாரம் இருமுறை, தில்லி ஓக்லா, கொல்கொத்தா ஹவுரா, செகந்திராபாத் மற்றும் கோவை, சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, பெங்களூரு என தமிழகத்தில் மட்டும் மொத்தம் 11 தனியார் இரயில்கள் இயக்கப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தில்லி-லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜாஸ் விரைவு இரயில் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மேலும் 150 பயணிகள் இரயில்கள், 400 இரயில் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. முதலில் 50 இரயில் நிலையங்கள் உடனடியாக ஒப்படைக்கப்பட இருக்கின்றன.

ஏற்கனவே, அலுவலகங்கள், சேவை அடிப்படையிலான பணிகள், பயணச்சீட்டு விற்பனை ஆகியவை, பகுதி பகுதியாகப் பிரித்துத் தனியார் மயம் ஆக்கப்பட்டுவிட்டன.

தனி பொதுத்துறை நிறுவனம் ஒன்றைப் புதிதாகத் தொடங்கி, அதனிடம் உற்பத்திப் பிரிவுகளை ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகின்றது. இதற்காக தனியார் முதலீடுகளுடன் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டு இருக்கின்றது.

இவ்வாறு இரயில்வேத்துறை முழுமையும் தனியார் மயம் ஆக்கப்படும்போது, அரசு மானியம் படிப்படியாக ஒழிக்கப்படும். தற்போது பயணிகள் கட்டணம் ஒரு ரூபாயில் 43 பைசா மானியமாக அரசு தருகின்றது. இந்த மானியத்தை நிறுத்தினால், பயணிகள் கட்டணம் பல மடங்கு உயரும். இரயில் பயணிகள் பெரும் பாதிப்பு அடைவார்கள்.

குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்குச் சேவை அளித்து வரும் இரயில்வேத் துறையைச் சீர்குலைத்தால், ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சீர்குலையும்.

உலகிலேயே அதிக பணியாளர்கள்,தொழிலாளர்களைக் கொண்ட 9ஆவது மிகப்பெரிய நிறுவனமான இந்திய இரயில்வேத் துறையில், 14 இலட்சத்திற்கு மேற்பட்டோர் பணி புரிகின்றனர். தனியார் மயமானால், அந்தத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி விடும்.

எனவே, மத்திய அரசு, இரயில்வேத் துறையைத் தனியார் மயம் ஆக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக